| ‘‘தென்றல் வீசிடும் சுகமும் - நறுந் தேன்கை குழைக்கும் நயமும் ஒன்றிப் பேசிடும் குரலாயின் - அது உரைக்கும் இன்னிசையாகாதோ? மன்றில் பாடும் பாடல் போல் - சிலர் மனத்திற் பாடும் பாட்டுண்டு ஒன்றிக் கேட்கும் இசையுண்டு - இவ் உலகிற் கேளா இசையுண்டு...’’
|
இந்தப் பாடலை ஒவ்வோர் அடியாக வாயினாலேயே இட்டுக் கட்டிச் சேர்த்தபோது சில இடங்கள் கச்சிதமாகவும் வடிவாகவும் வரவில்லை என்பதை அவனே உணர்ந்தான். ஆனாலும் பாடிய அளவில் ஓர் ஆத்மதிருப்தியை அவன் அடைய முடிந்தது. இப்படி முத்துக்குமரன் வராந்தாவில் நின்று தோட்டத்தையும், மனத்துள் நினைவலையாகச் சிலிர்த்த மாதவியின் குரலையும் இரசித்துக் கொண்டிருந்தபோது, கோபாலே ‘நைட் கோட்’ களையாத கோலத்தில், முத்துக்குமரனைப் பார்ப்பதற்காக அவுட் ஹவுசுக்குத் தேடிக்கொண்டு வந்தான். ‘‘நல்லாத் தூங்கினியா வாத்தியாரே?’’ ‘‘தூக்கத்துக்கென்ன குறைச்சல்...?’’ ‘‘அது சரி! இப்ப நான் உங்கிட்டப் பேச வந்த விஷயம் என்னன்னா...?’’ ‘‘என்ன?’’ ‘‘நேத்து வந்த பொண்ணுங்களிலே உனக்கு யாரை ரொம்பப் பிடித்திருந்திச்சு வாத்தியாரே?’’ ‘‘ஏன்! கல்யாணம் கட்டி வைக்கலாம்னு பார்க்கிறியா?...’’ ‘‘அட அதுக்கில்லேப்பா!...நம்ம நாடகக் குழுவின் தொடக்க விழாவைச் சீக்கிரமே நடத்தி முதல் நாடகத்தை அரங்கேத்திப் பிடணுங்கிறதுலே நான் ரொம்பத் |