| ‘‘வாத்தியாரை இதைவிட அதிகமா அவமானப்படுத்த வேறே எந்த வாக்கியத்துனாலேயும் முடியாதுன்னு பார்க்கிறயா?’’
‘‘ஏன், இதுலே என்ன அவமானம்?’’
‘‘இல்லே பிலிப்குமார் ஒரு நடிகன். நானோ ஒரு கர்வக்காரக் கவிஞன்!...அவன் தங்கிய இடத்தை ஒரு க்ஷேத்திரமாக நான் நினைக்க முடியாது. நீ அப்படி நினைக்கலாம். நானோ நான் தங்கிய இடத்தை மற்றவர்கள் க்ஷேத்திரமாக நினைக்க வேண்டும் என்று எண்ணுகிறவன்.’’
‘‘எப்படி வேணுமானால் எண்ணிக்கோ வாத்தியாரே! நாடகத்தைச் சீக்கிரமா எழுதி முடி...’’ ‘‘எழுதிப்போடற ஸ்கிரிப்டை நீட்டா தமிழிலே டைப்பண்ண - ஓர் ஆள் வேணும்டா கோபால்!’’
‘‘எனக்கு ஒரு ஐடியா தோணுது! மாதவிக்கு நல்லா ‘டைப் ரைட்டிங்’ தெரியும்னு நேத்தி இண்டர்வ்யூலே சொன்னா. அவளையே டைப் பண்ணச் சொல்றேன். டைப் செய்யறப்பவே வசனம் அவளுக்கும் மனப்பாடம் ஆயிடும்...’’
‘‘நல்ல ஐடியாதான்...இப்படிக் ‘கதாநாயகியே’ கூடி இருந்து ‘ஹெல்ப்’ பண்ணினா எனக்குக்கூட நாடகத்தை வேகமா எழுத வரும்...’’
‘‘நாளைக்கே புதுத் தமிழ் டைப்ரைட்டிங் மெஷினுக்கு ஆர்டர் கொடுத்துடறேன்...’’
‘‘நீ ஒவ்வொண்ணா ஆர்டர் கொடுத்து வரவழைக்கப் போற மாதிரி நான் கற்பனைக்கு ஆர்டர் கொடுத்து வரவழைக்க முடியாது! அது மெல்ல மெல்லத்தான் வரும்.’’ |