பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி5

சமுதாய வீதி
 

     பட்டினத்திற்கு வந்தபின் அவனுடைய வாழ்வு மாறித்தானாக
வேண்டியிருந்தது. கந்தசாமி வாத்தியாரின் கானாமுத நடன விநோத
நாடகசபாவில் பாடல்களும், வசனமும் எழுதிச் சமயா சமயங்களில்-
மேடையேறி நடித்தும் வந்த காலத்தில் அவனுடைய வாழ்க்கையில் இவ்வளவு
வேகமுமில்லை, பிரகாசமுமில்லை. மதுரையிலும் சென்னையிலும் வாழ்க்கையின்
ஏற்றத்தாழ்வுகள் இவ்வளவு வேறுபடக் காரணம் என்னவென்று சிந்திப்பதற்கு
வேண்டுமானால் இடம் இருக்கலாம். வெளிச்சம் அதிகமாக இருக்கிற இடத்தில்
சிறிய வாழ்வு கூடப் பெரிதாகத் தெரியலாம்; வெளிச்சம் குறைவாயிருக்கிற
இடத்தில் பெரிய வாழ்வு கூடச் சிறிதாய் மங்கிப் போகலாம்.

     ‘‘வெளிச்சம்தானா வாழ்வு?’’ என்று கேட்டுப் பயனில்லை. பட்டினத்தில்
சூரியனின் வெளிச்சம் மட்டும் வாழப் போதாது. மனிதன் போடுகிற அல்லது
மனிதனைச் சுற்றிப் போடப்படுகிற வெளிச்சமே சில சமயங்களில் சூரியனின்
வெளிச்சத்தைவிடப் பெரிதாயிருக்க வேண்டிய அவசியம் இங்கு உண்டு.

     மதுரை கந்தசாமி வாத்தியாரின் கானாமுத நடன விநோத நாடக
சபாவில் இருந்தபோது அவனுடைய முழுப் பெயர் முத்துக்குமாரசாமிப் பாவலர்.
‘நாடக சபா’ கலைக்கப்பட்டு பட்டினத்துக் கலையுலகத்தில் பஞ்சம் பிழைக்க
வந்த ஆளாக நுழைந்தபோது வாழ்க்கை வசதிகள் சுருங்கியது போலவே
பெயரும் சுருங்கவேண்டிய நியதிக்கு அவன் தலை வணங்கியாக
வேண்டியிருந்தது.