| ‘‘நான் மெட்ராசுக்குப் புதுசு’’ என்ற கொச்சை வாக்கியத்துடன் தொடங்கிய அந்தப் பேச்சு அரைமணி நேரம் நீண்டது. அந்த அரைமணி நேரத்தில் எல்லாரையுமே தன் பேச்சினால் கொள்ளை கொண்டு விட்டான் அவன். விருந்தின் முடிவில் மாதவி ஒரு பாட்டுப் பாடினாள். ‘‘ஒளி படைத்த கண்ணினாய் வா வா...’’ தன்னை வரவேற்பது போலவே அவள் அந்தப் பாட்டைப் பாடுகிறாள் என்று அவனுக்குப் புரிந்தது. அவளுக்குச் சங்கீதமும் நன்றாகத் தெரியும் என்று அவன் உணர முடிந்தது. மிகவும் சுகமான குரலில் உருக உருகப் பாடினாள் அவள். அந்தக் குரலும் அவள்மேல் அவனை அதிகப் பிரியம் கொள்ளச் செய்தன. விருந்து முடிந்து விடை பெற்றுப் போகும் போது எல்லாரும் முதலில் கோபாலிடமும், பின்பு முத்துக்குமரனிடமும் கைகுலுக்கிச் சொல்லிக்கொண்டு போனார்கள். முத்துக்குமரனிடம் விடை பெற்றவர்களில் அவன் பேச்சைப் பாராட்ட மறந்தவர்கள் ஒருவர்கூட இல்லை எனலாம். மிக விரைவிலேயே வாத்தியார் எல்லாரையும் கவர்ந்துவிட்டதைக் கண்டு கோபால் பெருமிதப்பட்டான். விருந்தினர்கள் யாவரும் விடைபெற்றுச் சென்றபின், ‘‘பிரமாதமாப் பாடறியே நீ! அப்பிடியே சொக்கிப் போயிட்டேன்...போ’’ என்று மாதவியைப் பாராட்டினான் முத்துக்குமரன். ‘‘பாட்டு மட்டும்தானா? அதுக்குப் பரத நாட்டியம் கூட நல்லாத் தெரியும்...’’ என்று கூறினான் கோபால். - தனக்குத் தெரிந்ததை எல்லாம் அவனறியச் சொல்வதற்குக் கூசியவள்போல் மாதவி நாணி நின்றாள். முத்துக்குமரன் அவளது ஒவ்வோர் உணர்விலும் ஓர் அழகைக் கண்டு மனம் மயங்கினான். அவள் துணிவாக வெடுக் |