பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி7

     சுந்தரமான தோற்றமுடைய ஒருவனைப் போன்ற எடுப்பான முகத்தில்
இடையறாத புன்முறுவல், நல்ல உயரம், அளவான பருமன், இரண்டாம்
முறையாகத் திரும்பிப் பார்க்க யாரும் ஆசைப் படுகிற களையான தோற்றம்,
கணீரென்ற குரல், - இவை அவனிடம் இருந்தவை.

     எழும்பூர் நிலையத்தில் அவன் வந்து இறங்கிய தினத்தன்று மழை
கொட்டு கொட்டென்று கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. ஒரு
தென்பாண்டிச் சீமைக் கவிபட்டினத்தில் வந்து இறங்குவதைக்
கொண்டாடுவதற்காக மழை பெய்ததாக யாரும் அதற்குள் தப்புக் கணக்குப்
போட வேண்டியதில்லை. அது டிசம்பர் மாத பிற்பகுதியாதலால் வழக்கம்
போல் சென்னையில் மழை கொட்டிக் கொண்டிருந்தது. டிசம்பர் மாதத்தில்
மட்டுமில்லை ; எந்த ஒரு மாதத்திலுமே பட்டினத்துக்கு அப்படி ஒரு மழை
தேவையில்லை. மழை பெய்தால் பட்டினத்தில் எதுவும் விற்பதில்லை,
தியேட்டர்களில் கூட்டம் குறைகிறது. குடிசைப் பகுதிகளில் நீர் ஏறுகிறது.
அழகிய பெண்கள் மினுமினுப்பான புடவைகளில் சேறு தெரிக்குமே என்று
பயந்துகொண்டே தெருக்களில் நடக்கவேண்டியிருக்கிறது. வெற்றிலை பாக்குக்
கடை முதல் புடவைக்கடை வரை வியாபாரம் மந்தமடைகிறது. குடைகள்
மறதியால் தவறிப் போகின்றன. ஏழைப் பள்ளி ஆசிரியர்கள், குமாஸ்தாக்களின்
செருப்புக்களில் திடீரென்று வார் அறுந்து போகிறது. டாக்ஸிக்காரர்கள் எங்கே
கூப்பிட்டாலும் வரமறுக்கிறார்கள். இப்படி மழைக்குப் பயப்படுகிற
பட்டினத்திற்கு எதற்காக மழை வேண்டும்?

     ஆனால் முத்துக்குமரனுக்கோ மழையில் நனைந்த பட்டினம் மிகமிக
அழகாகத் தெரிந்தது. நீராடி நனைந்த புடவையோடு நாணிக் கோணித் தயங்கி
நிற்கும் ஒரு சுந்தரியைப்போல் அன்று சென்னை அழகாயிருப்பதாக
அவனுக்குத் தோன்றியது. புகை போன்ற மேக மூட்டத்