பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி73

அறிமுகம் செய்து வைத்தாள். அந்த வயதான அம்மாள் மலையாள பாணியில்
காதில் ஓலையணிந்து பட்டையாகச் சரிகைக் கரையிட்ட பாலராமபுரம் நேரியல்
- முண்டு தரித்துக் கொண்டிருந்தாள். எவ்வளவோ சொல்லியும் காபி
குடிக்காமல் அங்கிருந்து தப்ப முடியவில்லை.

     ‘‘கடற்கரைக்குப் போய்விட்டு மறுபடி இரவு சாப்பாட்டுக்கு இங்கேதான்
திரும்ப வரப்போகிறோம் இப்போதே காபியைக் கொடுத்து அனுப்பி
விடலாமென்று பார்க்காதீர்கள்’’ - என்று முத்துக்குமரன் கேலியாகக் கூறியும்
அந்த அம்மாள் கேட்கவில்லை. அவனுக்கும், மாதவிக்கும் சக்கை வறுவல்,
காபி கொடுத்த பின்பே கடற்கரைக்குப் போக விட்டாள். அவர்கள்
கடற்கரைக்குப் புறப்படும் போதே ‘‘எட்டு எட்டரை மணிக்குள் சாப்பாட்டுக்கு
வந்துவிட வேண்டும்’’ - என்பதையும் வற்புறுத்திச் சொல்லியனுப்பினாள்.
கூட்டம் குறைவாக இருக்கும் என்ற காரணத்தினால் ‘எலியட்ஸ்’ கடற்கரைக்குப்
போகலாம் என்றாள் அவள். அவனோ அதற்கு நேர்மாறாக முரண்டு
பிடித்தான்.

     ‘‘கூட்டத்துக்குப் பயப்படறதுக்கும், அதைக் கண்டு விலகி ஓடறதுக்கும்
நம்ம ரெண்டு பேரும் கோபாலைப் போல அவ்வளவு பிரபலமாயிடலையே?’’-

     ‘‘அதுக்குச் சொல்லலே...உட்கார்ந்து பேசறதுக்கு வசதியா
இருக்கும்னுதான் பார்த்தேன்.’’

     ‘‘எந்த இடத்திற்குப் போனாலும் வசதியாகத்தானிருக்கும். இந்தக் குளிர்
காலத்திலே எவன் கடற்கரைக்கு வரப்போறான்?’’ - என்றான் முத்துக்குமரன்.
சாலையிலேயே காரை நிறுத்திக் கொள்ளுமாறு கூறிவிட்டுக் கடற்கரை
மணலிலே நடந்தார்கள் அவர்கள். எலியட்ஸ் பீச்சில் அந்தக் குளிர் மிகுந்த
டிசம்பர் மாத முன்னிரவில் கூட்டமே இல்லை. ஒரு மூலையில்
வெள்ளைக்காரக்