பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி83

கொண்டிருந்தார்கள். கோபாலே இரவு அண்ணாமலை மன்றத்தில் அல்ஜீரியா
நடனம் முடிந்து திரும்பியவுடனேயோ, காலையிலேயோ டிரைவரிடம் அதைப்
பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டிருக்கக் கூடும் என்பது முத்துக்குமரனுக்குப்
புரிந்தது. ஆனாலும், ‘யாரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டாய்’ என்பதைக்
கோபாலிடம் வினாவவில்லை அவன்; பத்துப் பதினைந்த நிமிஷ அமைதிக்குப்
பின் கோபாலே மீண்டும் பேசினான்:

     ‘‘நாடகம் எந்த நிலையிலிருக்கிறது? எத்தனை பக்கங்கள்
எழுதியிருக்கிறாய்?’’

     பதில் சொல்லாமல் கையெழுத்துப் பிரதியும், டைப் செய்யப்பட்ட
பகுதிகளுமாக இருந்த மேஜையை நண்பனுக்குச் சுட்டிக் காண்பித்தான்
முத்துக்குமரன். கோபால் அந்தப் பிரதிகளை எடுத்து அங்கும் இங்குமாகப்
படிக்கத் தொடங்கினான். படித்துக் கொண்டிருக்கும் போதே நடு நடுவே சில
அபிப்பிராயங்களையும் கூறலானான்.

     ‘‘செலவு நெறைய ஆகும்னு தெரியுது. தர்பார் ஸீன், அது இதுன்னு
ஏராளமான ஸீன்ஸ் எழுதிக்கணும், இப்பவே தொடங்கினாத்தான் முடியும்.
‘காஸ்ட்யூம்ஸ்’ வேறே செலவாகும்...’’

     இந்த அபிப்பிராயங்களை விமர்சிக்கும் ரீதியிலோ, இவற்றிற்குப்
பதிலுரைக்கும் ரீதியிலோ முத்துக்குமரன் வாய் திறக்கவே இல்லை.

     - சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கோபால் போய்விட்டான்.
நாடகம் எடுப்பாகவும் நன்றாகவும் வாய்த்திருப்பதாக அவன் பாராட்டிவிட்டுப்
போன வார்த்தைகளைக் கூட அவ்வளவு ஆழமானவைகளாக முத்துக்குமரன்
எடுத்துக் கொள்ளவில்லை, அப்போது அவன் மனத்தை அரித்துக்கொண்டிருந்த
விஷயம் வேறாக இருந்தது. தன் வீட்டில் வந்து தங்கியிருக்கும் விருந்தினர்