பக்கம் எண் :

94சமுதாய வீதி

     ‘‘சார் பெரிய கவி. ரொம்பப் பிரமாதமான கவிராயர் பரம்பரையிலே
வந்தவரு. இப்ப நம்ம கோபால் சாரோட கம்பெனிக்கு நாடகம் எழுதறாரு.
பாட்டுக் கட்டறதிலயும் கெட்டிக்காரரு’’ என்று ஜில் ஜில் முத்துக்குமரன் மேல்
தன் கருணையைப் பெருக விட்டபோது,

     ‘‘ஆகா! அந்தக் காலம் இனிமே வருமா? கிட்டப்பா மேடைக்கு வந்து
‘காயாத கானகம்’னு ஒரு பிடி பிடிச்சார்னா அந்தக்குரல் சபையையே
நிறைக்குமே; ஐயோ! என்ன காலம் அது?’’ - என்று ஆரம்பித்து விட்டான்
அங்கப்பன். தன்னைப்பற்றி ஜில் ஜில் கூறியதைத் தவறாகக் காதில்
வாங்கிக்கொண்டு ‘பாட்டுக் கட்டறதிலே கெட்டிக்காரரு - என்பது போல்
நினைத்து அங்கப்பன் கிட்டப்பாவைப் பற்றிப் பேசியதை முத்துக்குமரன்
கேட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று. தனக்கு வேண்டிய தர்பார் ஸீன்,
நந்தவன ஸீன், ராஜ வீதி, அரண்மனை முற்றம் போன்ற சில ஸீன்களைக்
கோபால் விவரித்தபின் தன்னிடம் புதிதாகவே இருந்த சில ஸீன்களை
விரித்துக் காண்பித்தான் அங்கப்பன். என்னென்ன மாதிரியான ஸீன்கள்
தேவைப்படும் என்பதை முத்துக்குமரனிடம் அங்கே வைத்தே கேட்டான்
கோபால். கேட்டுவிட்டுப் பதிலை எதிர்பாராமல் முத்துக்குமரன் பதில்
சொல்வதற்குள் தானாகவே, ‘இன்னின்ன ஸீன்கள் அவசியம்
தேவையாயிருக்கும்’ - என்று ஜில் ஜில்லையும் அங்கப்பனையும் நோக்கி
விவரிக்க ஆரம்பித்து விட்டான். முத்துக்குமரனுக்கு இது பிடிக்கவில்லை.
ஆயினும் சும்மா இருந்தான். அடுத்து பத்து நிமிஷத்தில் மறுபடியும் கோபால்
முத்துக்குமரன் பக்கமாகத் திரும்பி ஸீன்களைப் பற்றி ஏதோ யோசனை கேட்ட
போது, ‘‘என்னென்ன ஸீன்கள் வாங்குகிறாயோ அதற்குத் தகுந்த மாதிரிக்
கதையை எழுதிட்டா நல்லாயிருக்கும்’’ - என்று சிரித்துக்கொண்டே பதில்
சொன்னான் அவன். கோபாலோ இந்த வார்த்தைகளில் இருந்த தாக்குதலைப்
புரிந்து கொள்ளாமல், ‘‘சில