திருத்துவதா? தீர்ப்பதா? பகையிலும் குழப்பத்திலும் தோன்றி வளர்ந்த தேர்தல் எவ்வாறு முடிகின்றது? ஒரு கட்சியின் வெற்றியாக மலர்கின்றது. பிறகு கட்சியின் செல்வாக்காகக் காய்க்கின்றது. பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறாக நடக்க வேண்டி ஏற்படும்போது அடக்குமுறை ஆட்சியாகக் கனிகின்றது. அதன் பயனாக எதிர்ப்பு உணர்ச்சி வலுத்தபோது, எதிர் கட்சியின் வாழ்வுக்கு வித்தாகின்றது. பகையும் குழப்பமும் தொடக்கத்தை விடப் பன்மடங்கு மிகுதியாகின்றன. இந்த மன்றத்தை அமைக்கும்படி வாக்குரிமை கொடுத்ததே தவறு என்று பலருடைய மனமும் எண்ண இடம் ஏற்படுகின்றது. விரைவில் மாற்றியமைக்க வேண்டும், வேறு அமைச்சர் குழு அமைக்க வேண்டும். மறு தேர்தல் நடத்த வேண்டும், என்றெல்லாம் பலவகை எண்ணங்கள் எழுகின்றன. எண்ணங்களுக்குள்ள ஆற்றல் எவ்வளவோ பெரியது அல்லவா? இன்று எண்ணமாக இருக்கலாம். நாளைக்குச் செயலாக மலர்வது அதுதானே! இப்படி எண்ணுவோர் பலர்; அவருள் சிலர் அந்த எண்ணத்தை வெளிப்படுத்த முன்வருவார்கள். ஆனால், ஆளும் கட்சி அதற்கு உரிமை கொடுக்குமா? அதுதான் அருமை. உரிமை கொடுத்தால் சிக்கல் வளராது. கொடுமை அரும்பாது. கருத்துரிமை இல்லாதபடி தடை பிறப்பதால், எண்ணம் சிலருக்குத் துணிந்த செயலாக |