மாறிவிடும். உரிமை கொடுக்கத் தவறினால், பெற்ற தாயின் மேலும் வெறுப்புக் கொள்ளும் அளவு குழந்தையின் மனம் கெடவில்லையா? பாலூட்டிய தாயை வெறுத்துக் கல் எடுத்து எறியக் குழந்தையும் துணியவில்லையா? அது போலவே, பேசவும் உரிமையற்ற நிலைமை. அல்லது பேசியும் பயன் விளையாத நிலைமை ஏற்பட்டபோது, சிலருடைய மனம் துணிந்து கொடுஞ்செயலில் இறங்கி விடும். நாட்டை ஆளும் தலைவர்களைக் கொன்றவர்கள், கொல்ல முயன்றவர்கள், பலர் உலக வரலாற்றில் இல்லையா? புகைவண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. வண்டியில் ஏறி உட்கார்ந்திருந்த பலரும் எண்ணியது ஒன்று. ஆனால் வண்டியோ நேர்மாறான நெறியில் ஓடிக்கொண்டிருக்கிறது. அப்போது என்ன செய்வார்கள்? கூக்குரல் இடுவார்கள். அதையும் கேட்பார் இல்லையானால் மக்களின் மனம் பொறுமை இழக்கும் அல்லவா? அவர்களுள் சிலர் ஆத்திரமும் துணிவும் கொண்டு செயல் ஆற்ற முந்துவார்கள் அல்லவா? வண்டியை ஓட்டுகின்றவர்களின்மேல் பழி இல்லாமலிருக்கலாம். அவர்கள் மற்றவர்களின் விருப்பத்திற்காக இணங்கி ஓட்டுகின்றவர்களாக இருக்கலாம். ஆனால் பொதுமக்களின் மனம் ஓட்டுகின்றவர்களையும் அவர்களை ஆட்டுகின்றவர்களையும் வெறுக்காம லிருக்க முடியுமோ? வண்டியிலிருந்து கொண்டு கூக்குரல் இடும் போது செவி கொடுக்காமல் ஓட்டிய குற்றத்தைப் பொதுமக்கள் மறப்பார்களா? "உங்கள் விருப்பம்போல் இப்போது ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் கூக்குரல் இடக்கூடாது. பேசாமல் வர வேண்டும்", என்று ஆணையும் பிறந்தால் துணிந்த மனங்கள் அமைதியாக இருக்க |