அவர்கள் கொடுக்கும் தலைமைப் பதவியைப் பெறுகின்றார்; திண்ணையாருக்கு நிகரான தலைவராக விளங்குகின்றார். இது சிறுவர்களின் மனப்பான்மை மட்டும் அல்ல; வளர்ந்த மக்களுக்கும் இந்த மனப்பான்மை இருக்கின்றது. வேறுபாடு கருதாத ஒற்றுமையை அறிவுறுத்தினால் கேட்பார் எவரும் இல்லை. தனித்தனியே பிரிந்த பிரிவுகளை உறுதிப்படுத்தி அவைகளுக்கு ஏற்றபடி தூபமிட்டால் தலைமைப் பதவி உண்டு; மதிப்பு உண்டு; போற்றுதல் உண்டு. நம் இனம், நம் வகுப்பு, நம் நிறம், நம் மதம், நம் நாடு என்று உலகத்தில் பிரிந்துள்ள பிரிவுகள் எல்லாம் இப்படி ஏற்பட்டவைகளே. இவ்வாறு இடத்தால் வரையறைப்படுத்திக் கொண்டு, ஒரு வகையாரோடு நின்று தொண்டு செய்தால், வெற்றி பெற வழி இருக்கின்றது. இவ்வாறு குறுகிய நோக்கத்தோடு பேசும் பேச்சும் செய்யும் செயலும் உடனே பயன்படுகின்றன. பரந்த நோக்கத்தோடு எல்லோரும் வாழ வேண்டும் என்றும், விட்டுக் கொடுத்து வாழவேண்டும் என்றும், நம் உரிமையைக் காத்துக் கொண்டே பிறர்க்கும் உதவவேண்டும் என்றும் பேசினாலும், தொண்டு செய்தாலும் கேட்பாரும் இல்லை; கொள்வாரும் இல்லை. இந்த நிலைமையில் அரசியல் நின்று விட்டாலும் கவலை இல்லை. முன்பே பகையையும் பிரிவையும் வளர்த்த அவர்களே தந்திரம் உள்ளவர்களாய் இப்போதும் அரசியலைக் கெடுக்க முன்வருகிறார்கள். பகையும் பிரிவும் வெறுப்பும் மெல்ல மெல்ல மறைந்து போகும் வேளையில் இவர்கள் மக்களின் மனப்பான்மைக்கு ஏற்றபடி பேசி, |