தொடக்கத்தில் இருந்த அமைதியும் பிறகு மலிந்த குழப்பமும் சான்று பகர்கின்றன. பெற்றோரின் மருட்டலும் உருட்டலும் அடியும் உதையும் முதலில் குழந்தையை அடக்கி அமைதியை நிலைநாட்டுகின்றன. ஆனால் அந்தக் குழந்தை வளர்வதில்லையா? வளர்ந்து கையும் காலும் பயன்படுத்திக் கற்றுக் கொண்ட பிறகு, அந்தக் குடும்பம் என்ன ஆகின்றது? அடியும் உதையும் அவனிடமிருந்தே ஆற்றலோடு புறப்படவில்லையா? முதலில் ஆலவிதை; பிறகு ஆலமரந்தான். தன் குடும்பம் வாழ உடனே வழிகாண வேண்டும் என்பது தான் திருடன் நோக்கம். திருடிய பொருளால் இன்று பெறும் நன்மையே பெரியது என்று அவன் கருதுகிறான். திருடாமல் பட்டினியிருந்து பசித்துன்பத்தால் வாடினாலும் நாளைக்கு நல்வழியில் உழைத்து உயிர் வாழலாம் என்று அவன் நாடவில்லை. பொய்யனும் புறங்கூறுவோனும் அவ்வாறே. உண்மையை இன்று சொல்லி நாளைக்கு நல்ல பெயரும் நல்ல வாழ்வும் பெறுவதற்குப் பொறுமை வேண்டும்; அதைவிட இன்று பொய்யே சொல்லி வாழும் வாழ்வையே பொய்யன் மதிக்கிறான்; அதனாலேயே பொய் சொல்லத் துணிகின்றான். புறங்கூறுவோனும் அப்படியே உடனே பெறும் நன்மையை நாடிப் புறங்கூறுகின்றான். பகைவனை அன்போடு நோக்கிப் பல தீங்கும் பொறுத்து இன்று இடர்ப்பட்டு நாளைக்கு நலமுறலாம் என்று எண்ணுவது அருமை அல்லவா? பகைவனுக்கு உடனுக்குடன் இடரிழைத்து வாய்ப்புக் கிடைத்த போது கொலை முதலியனவும் செய்வதால் உடனே ஆறுதல் கிடைப்பதாகத் தோன்றுகிறது; அதனால்தான் பொறுமையற்றவர்கள் தீயராய்க் கொடியராய்க் கொலைஞராய் மாறுகின்றார்கள். ஆனால் |