ஊழ் முன்னோர்கள் ஒரு வழியை அமைத்து ஆராய உதவினார்கள். அறத்தின் ஆட்சி முறையை ஊழ் என்று பெயரிட்டு விளக்கினார்கள். அறம் இயற்கையாவது போல, ஊழ் இயற்கையின் சட்டமாகின்றது. அந்த ஊழ் வலியது, வெல்ல முடியாதது. விடாது தொடர்வது என்றார்கள். இதை விளக்கமாக உணர்த்தினால் குறுகிய நோக்கம் ஒழியும் என்று நம்பினார்கள். இன்று எப்படியாவது வெற்றி பெற்று நல்ல நிலையில் வாழ்ந்தால் போதும் என்று நாளை வாழ்க்கையைப் புறக்கணிப்பது குறுகிய நோக்கம் அல்லவா? அப்படிப்பட்டவர்களைப் பார்த்து, "வாழ்க்கை என்பது இன்று அல்லது இந்தத் திங்கள் அல்லது இந்த ஆண்டு என்று வரையறுக்க முடியாதது. இன்றுள்ள வாழ்க்கையைத் திடீரென்று அமைத்துவிட முடியாது. நேற்று வரை வாழ்ந்த வாழ்க்கையின் அடிப்படையில் இன்றைய வாழ்க்கை அமைகின்றது. இன்றைய வாழ்க்கையில் முளையும் முளையே நாளைய வாழ்வாக வளர்கின்றது. ஆகவே நினைத்தவுடனே ஒரு மரத்தைப் படைத்து வளர்த்துச் செழிக்கச் செய்து அதன் நிழலில் அமைந்திருக்க முடியாது. நெடுங்காலத்திற்கு முன் இட்ட வித்தே இன்றைய வாழ்க்கையாகிய மரம். இந்த மரத்தில் கனியும் கனிகளே நாளை வாழ்விற்கு உரிய வித்துக்களை உடையவை. நாளைய வாழ்வு என்னும் மரம் செழிக்க வேண்டுமானால் நல்ல வித்து இப்போதே விதைத்து வளர்க்க வேண்டும். எதை விதைக்கின்றீர்களோ அது விளையும். விதைக்கும் போது கவலைப்படாமலிருந்துவிட்டு அறுக்கும் போது |