கொள்வதற்காகச் செல்வர்கள், வீட்டுக்குப் பூட்டும் தாழும் காவலும் படையும் பிறவும் அமைத்துக் கவலைப் படுகின்றார்கள். பக்கத்தில் உள்ளவர்களின் மேல் ஐயமும் நம்பிக்கைக் குறைவும் ஏற்பட்டால், அந்த மனத்தில் கவலைக்கு அளவு உண்டா? தனித்திருக்கும்போதும் தனியே செல்லும் போதும் இருண்ட இராக்காலத்திலும் எல்லாரும் உறங்கும் காலத்திலும் செல்வர்களின் மனத்தில் இன்பம் இல்லை. அமைதியும் இல்லை. துன்பமும் குழப்பமுமே உண்டு. தம் வாழ்க்கைக்குச் சிறு கருவியாய் வயிறு வளர்ப்பதற்கு இவ்வளவு கவலையும் அல்லலும் அடைகின்றார்கள். இனத்தின் தீவினையாக விளைவது இது. இந்தச் செல்வ இனத்தாரில் ஒருவர் இருவர் மிக நல்லவர்களாக, ஈரநெஞ்சு உடையவர்களாக இருக்கலாம். பாவம்! அவர்களையும் இந்தத் தீவினை விடுவதில்லை. நல்லவர்களான அவர்களும் அல்லலுக்கும் கவலைக்கும் ஆளாகின்றார்கள். இதுவே இனம் பற்றிய ஊழின் வலிமை. அறிவுச் செல்வம் உடையவர்களும் இவ்வாறு ஓர் இனமாகச் சேர்ந்து வாழ்ந்து மற்றவர்களை ஒதுக்கி வாழும் வாழ்விலும் இப்படியே தீவினைகள் விளைகின்றன. அவர்கள் அறிவில்லாத மக்களைப் புறக்கணித்தும் அடக்கியும் தம் வரையில் முன்னேற்றம் பெறுகின்றார்கள். உலக வாழ்க்கையில் இப்படி ஒதுங்குவதும் அடக்குவதும் தீவினையே. இந்தத் தீவினையின் விளைவால் அறியாமை மிக்க மக்களிடையே ஒருவன் தோன்றிச் செல்வாக்குப் பெறுகின்றான்; எதிர்க்கும் ஆற்றலைத் திரட்டுகின்றான்; வலிமையைப் பெருக்குகின்றான். மக்களோ அவனுக்கு எல்லா வழியிலும் துணைசெய்து தலைமையும் தருகின்றார்கள். அவன் யாருக்குத் தலைவன்? பெரும்பாலோருக்குத் |