ஆகவே, உலகத்தில் அறம் வாழ வேண்டுமானால், அமைதி நிலவ வேண்டுமானால், சில மாறுதல்களைச் செய்ய வேண்டும். இவற்றைச் செய்வதே எதிர்காலத்தில் தியாகம் என்று கருதப்படும். வீடு வாசல் முதலியவற்றைக் கொடுத்துவிடும் செயலை எதிர்காலம் தியாகம் என்று போற்றாது. அவற்றை இவர் கொடுப்பது கடமையா, தியாகமா, இவருக்கு அவற்றில் உள்ள உரிமை எவ்வளவு என்றெல்லாம் ஆராயவல்லது எதிர்காலம். ஆகையால் தனி மானத்தையும் தனி விருப்பு வெறுப்பையும் விட்டுக் கொடுத்துக் குடும்பக் கடமையைச் செய்வதே குடும்பத்திற்குச் செய்யும் தியாகமாக விளங்கும். தனி மானத்தையும் குடும்ப மானத்தையும் தனி விருப்பு வெறுப்பையும் கொண்டுவந்து புகுத்திக் கெடுக்காமல், பொதுவாழ்க்கையில் தன் பங்கு இன்னது என்று உணர்ந்து தொண்டு செய்வதே நாட்டிற்காகச் செய்யும் தியாகமாக விளங்கும். இவ்வாறே, தனி மனிதன் வளர்ச்சி இருந்த நிலைமை குறைந்து சமுதாய வளர்ச்சி மிகுதியாகும் இந்தக்காலத்தில், தனி ஒருவன் செல்வம், தனி ஒருவன் குற்றம், தனி ஒருவன் புண்ணியம், தனி ஒருவன் பாவம் இவற்றை எண்ணுவதும் பேசுவதும் போக வேண்டும். தனிஒருவனிடம் குற்றம் கண்டு அதற்கு அவன் காரணம் எனப் புகழ்வது அறம் அல்ல என்று உணர வேண்டும்; அவனுடைய குற்றத்திற்குக் காரணமாக இருந்து வரும் சூழ்நிலையை எண்ணிச் சமுதாயத்தின் குற்றமாகக் கருத வேண்டும். தனிஒருவன் செய்யும் செயலைப் புகழ்ந்து அந்தப் புண்ணியம் அவனுக்கு உரியது என்றும் அவன் துறக்கம் பெறுவான் என்றும் எண்ணுவது அறம் அல்ல. அந்த நல்ல செயலைச் செய்யும்படியான வாய்ப்பைச் சமுதாயம் அவனுக்குக் கொடுத்தது |