பக்கம் எண் :

110 இலக்கிய ஆராய்ச்சி
 
     இவ்வாறு இருந்தும், பாட்டு, படிப்படியாக வளர்ந்து வருகின்றது என்றே கூற
வேண்டும், உணர்ச்சி ஒலிகளையும் இசைக் கருவிகளையும் விட்டு வளர்ந்த பாட்டு
முதலில் இருந்த நிலை வேறு; இன்று இருக்கும் நிலை வேறு. தமிழ் நாட்டில்
கலிப்பாட்டும் பரிபாடலும் செல்வாக்குடன் இருந்த நிலையைத் தொல்காப்பியத்தால்
அறிகின்றோம்;
 
  நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்
உரிய தாகும் என்மனார் புலவர்.

(தொல், பொருள். 53)
 

     கலியோடு வழங்கிய மற்றொரு பாட்டு வஞ்சிப்பா என்பது. இவற்றின் ஓசை
துள்ளல் என்றும் தூங்கல் என்றும் கூறப்படும். இவை மற்றப் பாட்டு வகைகளை விட
இசையின்பம் மிக்கவை. ஆனால் இன்று இவை செல்வாக்கும் இழந்துவிட்டன.
வெண்பாவும் ஆசிரியப்பாவும் வாழ்கின்றன. இவற்றுள் இசையின்பம் மிக்கது வெண்பா
எனலாம். ஆசிரியப்பாவும் தன் இனமாகிய விருத்தத்திற்கு இடங்கொடுத்து
ஒதுங்கியுள்ளது. விருத்தம் செல்வாக்குப் பெறக் காரணம் என்ன? வெண்பா,
ஆசிரியப்பாக்களைப் போல் ஒலியளவால் கட்டுப்படுத்தல் இல்லாமல் நீட்டவும்
குறுக்கவும் திரிக்கவும் கலக்கவும் இடந்தந்து பலவேறு வகைப்படுத்தலே காரணமாகும்.
ஆகவே, பாட்டு மெல்ல மெல்ல ஒலிக் கட்டுப்பாடுகளைக் கடந்து இசைக்
கலையிலிருந்து இயன்ற அளவு விடுதலை பெறுதலைக் காண்கிறோம். அடி முதலில்
வரையறையும் எதுகை மோனை முதலிய வரம்புகளும் கடந்து மேற்கு நாடுகளில்
உள்ளதுபோல் இந் நாட்டிலும் உரைநடைப் பாட்டு (வசன கவிதை) வளரவும்
தொடங்கியுள்ளது. இதுவும் பாட்டின் விடுதலை வேட்கையையே புலப்படுத்துகின்றது.
மனிதனுடைய அறிவு வளர்ச்சியை