பக்கம் எண் :

எள்ளும் எண்ணெயும் 119
 
முடியாமல் ஆசிரியப்பாவை நாடுவாரானால், அவரும் செய்வது அறியாமல் கலங்கல்
வேண்டும். ஆகவே, இன்னவகைச் செய்யுள் இத்தனை, இந்த முறையில் அமைவதே
இன்ன நூல் என்று செய்த வரையறை, நூல் இயற்றுவோரைக் கட்டுப்படுத்தும்
தளையாகவே மாறியது.
 
     கலம்பகம், பரணி, உலா முதலிய நூல்களுக்கு ஏற்பட்ட விதிகளும் இவ்வாறே
பிற்காலத்தாரைக் கட்டுப்படுத்துவன ஆயின.
 
     இத்தகைய விதிகளை விடாமல் போற்றிக் கட்டுப் பாடுகளுக்கு உட்பட்டு
நூல்களை இயற்றத் தொடங்கியவர் பலர் இடர்ப்பட்டார்கள்; ஒரு சிலர் வெற்றி
பெற்றார்கள். அந்த ஒரு சிலர் வெற்றி பெற்றதைக் கருதி, இந்த விதிகள் வேண்டும்
என்று வலியுறுத்தலாகாது. நிலத்தின் மேல் உள்ள கல்லைக் கடந்து சூரிய ஒளியைக்
காண முடியாமையால், எத்தனையோ விதைகள், அந்தக் கல்லின் அடியில் முளைத்துச்
சிறிது வளைந்து சென்று கதிரவனுடைய ஒளியை எட்டிப் பார்த்து எவ்வாறோ வளர்ந்த
பின் அந்தக் கல்லையே அசைத்து வீழ்த்தி அப்புறப்படுத்தி விடுகின்றன. அவை
வலிமையோடு வளர்வதைக் கண்டு, இனி எந்தச் செடிக்கும் முளைக்கும்போதே அதன்
மேல் கல் வைத்து மூடி அடக்கி வைப்பது நன்மை பயக்கும் என்று கூறுவது தகுமோ?
 
     திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர் முதலான பெரும் புலவர்கள்
எத்தனையோ விதிகளைப் போற்றி இலக்கிய நூல்களை இயற்றி அளித்திருக்கிறார்கள்.
அவர்கள் பற்பல கட்டுப்பாடுகளுக்கு வளைந்து சாய்ந்து பெரும் புலவர்களாய் எழுந்து
கட்டுப்பாடுகளைக் கடந்தவர்களாயும் விளங்கினார்கள். ஆயினும் அவர்களின்
வெற்றியைக் கண்டு, விதிகள் வேண்டும் என்று வற்புறுத்தல்