பக்கம் எண் :

காகிதப் பூந்தோட்டம் 129
 
செறிவே என்று அதையும் விடுத்து உவமை ஒன்றையே விளக்குகிறார். (Next come some
devices simile and Metophor. Metaphor is nothing but compressed simili so for the moment
we can confine ourselves to the latter)
பிற்காலத்தாரைப் போல் அணியை இத்தனை
இத்தனை என்று பாகுபாடு செய்து காலம் கழிக்காமல், தொல்காப்பியனார் உவமை
ஒன்றையே சிறப்பித்து, ஏனைய அதன் திரிபுகளே என்று உணரவைத்து, அணியியல்
என்ற பெயரும் தராமல், உவமவியல் என்றே அந்த இயலுக்குப் பெயரிட்டு
விளக்கியுள்ள பொருத்தத்தை இங்குப் போற்றல் வேண்டும்.
 
     ஒரு பாட்டு இன்ன அணி உடையது என்று கூறிவிடுதல் பாட்டைக் கற்றுணரும்
திறமை ஆகாது. பாட்டில் உள்ள ஒருவகை அழகுக்கு பெயர் கூறத் தெரிந்த திறமையே
அது. அது புலமை ஆகிவிடாது. அந்தப் பாட்டில் உள்ள சொற்களைப் பிரித்து இது
இன்னபெயர்ச் சொல், இது இன்ன வினைச் சொல் என்று கூறுவதற்குச்
சொல்லிலக்கணம் துணை செய்வது போல், இது இன்ன அணி என்று கூறுவதற்கு
அணியிலக்கணம் துணை செய்கிறது. உண்மையான புலமை வேறு; அது இவ்வாறு
பெயரிடும் சடங்கு ஆகாது. பாடிய புலவர் உணர்ந்த அனுபவத்தைக் கற்பனைத் திறன்
கொண்டு உணர்வதே பாட்டைக் கற்றுணரும் புலமையாகும். அவ்வாறு
கற்றுணர்வதற்கும் எழுத்தும் சொல்லும் பொருளும் கருவிகளாகத் துணை செய்யும்
அளவிற்கும் அணியிலக்கணம் துணை செய்வதில்லை.
 
     இந்த உண்மையை இடைக்காலத்தில் இருந்த அறிஞர் பலர் உணரவில்லை.
அவர்கள் வடமொழியில் கற்ற அலங்கார இலக்கணத்தைத் தமிழில் மொழிபெயர்த்தனர்;
இவ்வாறு மொழி பெயர்த்த போது, வடமொழியில் உள்ள சிறந்த பகுதியை விட்டுவிட்டு,
சிறப்பில்லாப் பகுதியை மட்டும் விரிவாகக் கொண்டனர். ஒன்பது சுவைகளையும்