பக்கம் எண் :

18. சடங்குச் செய்யுள்  
 
     ஒரு கூட்டத்தில் சொல்ல வேண்டியவற்றை முன்னதாகவே ஆர அமர எண்ணி
எழுதி முடித்துக் கூட்டத்தில் படித்துவிடும் வழக்கம் சில இடங்களில் உள்ளது.
அதையும் சொற்பொழிவு என்றே கூறுகிறார்கள். மனத்தில் தோன்றிய எண்ணங்களை
அந்த நேரத்தில் அவ்வாறே கூட்டத்தினர்க்கு எடுத்துச் சொல்லும் சொற்பொழிவு முறை
இருக்கும்போது, எழுதிப் படிக்கும் முறை ஏன் வந்தது?
 
     கூட்டத்தில் போய் நின்றதும் உள்ளத்திலும் உடம்பிலும் தோன்றும் நடுக்கத்தால்,
சிலரால் பேச முடிவதில்லை; எண்ணக் கோவை சிதைவுபடுகிறது; அதனால் எழுதிப்
படிக்கும் வழக்கத்தை மேற்கொள்ளத் தொடங்கினார்கள் என்று ஒரு காரணம் கூறலாம்.
இவ்வாறு நடுக்கம் உடையவர்கள் எழுதிப் படிப்பதிலும் வெற்றி பெற முடியாது;
 ஆயினும் ஓரளவு கடமையைச் செய்ததாக ஆறுதல் கொள்ள முடியும் (நீதிமன்றத்தில்
வாய் திறக்க முடியாதவனுக்காக வழக்காடும் வழக்கறிஞனைப் போல், எண்ணும் ஆற்றல்
இல்லாதவனுக்காக அந்த ஆற்றல் உள்ள அறிஞர் ஒருவர் எழுதிக் கொடுக்க, அதைக்
கூட்டத்தில் படித்துவிடும் வழக்கமும் உண்டு. அதைச் சொற்பொழிவு என்று கூறுவது
சொல்லின் பெருமையைக் குறைக்கும் குற்றமாகும்.) எழுதிப் படிக்கும் பழக்கம் தோன்றி
வளர்ந்த உண்மைக் காரணம் வேறு. ஆங்கில நாட்டு வழக்கத்தை