பக்கம் எண் :

136 இலக்கிய ஆராய்ச்சி
 
ஆராய்ந்தால், அல்லது, அதை நாம் பின்பற்றும் முறையை ஆராய்ந்தால், அந்தக்
காரணம் விளங்கும்.
 
     நாட்டின் பொறுப்பான பதவிகளில் உள்ளவர்கள் பொறுப்பான கடமைகளைக்
குறித்துக் கூடிய கூட்டங்களில் பேசும்போது, எழுதிப் படிக்கும் வழக்கத்தைக்
கையாளுகிறார்கள்; பல்கலைக் கழகங்களின் பட்டமளிப்பு விழாப் பேச்சுக்கள்;
மாநாடுகளில் தலைமையுரைகள் முதலியவைகளும் எழுதிப் படிக்கப்படுகின்றன.
இத்தகைய சொற்பொழிவாளர்களை அதை நடுக்கம் உடையவர்கள் என்று கூறல்
பொருந்தாது. உண்மையை நோக்கினால், இவர்கள் எழுதிப் படிப்பதைவிட எழுதாமலே
அழகாகப் பேசும் திறன் உள்ளவர்கள்; ஆயினும் பொது நன்மையைக் கருதி ஒரு
கட்டுப் பாட்டிற்கு உட்பட்டு எழுதிப் படிக்கிறார்கள். கட்டுப்பாட்டை ஒரு கலையாக
வளர்த்துள்ள ஆங்கில நாட்டில் சிறந்த பேச்சாளராக உள்ளவர்களும் இவ்வாறு எழுதிப்
படிக்கும் வழக்கத்தைப் புறக்கணிப்பதில்லை.
 
     மனிதன் தன் உணர்ச்சியை நம்ப முடியாமல் அறிவை நம்பிச் செய்யும்
ஏற்பாடுகளில் இது ஒன்று ஆகும். கூட்டத்தில் நின்று பேசுவதனால், கூட்டத்தினரின்
உணர்ச்சி அவர்களுடைய முகக் குறிப்பாலும் ஆரவாரத்தாலும் வெளிப்பட்டுப்
பேசுவோரிடமும் செல்லும்; பேசுவோரின் உணர்ச்சியும், அவருடைய முகக் குறிப்பு
உடலசைவு முதலியவற்றால் வெளிப்பட்டுக் கூட்டத்தினரைச் சேரும். எந்த உணர்ச்சி
எப்போது எவ்வாறு தோன்றிடுமோ, அதனால் தாம் மேற்கொண்ட பொறுப்பான
நிலையினின்றும் நெகிழ நேருமோ என்று பொறுப்பு உணர்ந்தவர்கள் கவலை கொண்ட
காரணத்தாலேயே, மிக்க உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் அறிவின் துணையால்
ஒழுங்காக எழுதிப் படிக்கத் தொடங்கினார்கள். முன்னமே எண்ணி எழுதிய