பக்கம் எண் :

 சடங்குச் செய்யுள் 139
 
 ஆகையால் காண்போரை உடனே இயக்கும் ஆற்றல் இவற்றிற்கு இல்லை.
 
     ஆனால், மற்றொரு சிறப்பு இந்த கலைகளுக்கு உண்டு. உடனே பயன்
விளைக்காத இந்தக் கலைகள் நெடுங்காலம் நின்று பயன் விளைக்க வல்லவைகளாக
இருக்கின்றன. கேட்ட சொற்பொழிவும், கண்ட நாடகமும் அடுத்த நாளே
பழங்கதையாய்க் கனவாய் மெல்ல மறைகின்றன; ஓவியமும் சிற்பமும் நெடுங்காலமாக
பல நூற்றாண்டுகளாக நின்று பயன் தருகின்றன. ஆகையால் ஒருவகையில் குறையாக
இருந்ததை மற்றொரு வகையில் நிறையாகப் பெற்று வருகின்றன.
 
     விளைக்கும் பயனில் இவ்வளவு வேறுபாடு கலைகளுக்குள் இருந்த போதிலும்,
பிறக்கும் முறையில் வேறுபாடு காணோம். சிறந்த சொற்பொழிவாளன் நினைந்து
நினைந்து உணர்ந்து உணர்ந்து கலையாக்கித் தருவது போலவே, ஓவியக் கலைஞனும்
தன் உணர்வைக் கலையாக்கித் தருகிறான். அவன் உணர்ச்சிப் பெருக்கில் ஊறித்
திளைத்துக் கரையேறுவது போலவே இவனுடைய கலை முயற்சியும் அமைகிறது. இவை
மட்டும் அல்ல; சிறந்த சொற்பொழிவாளனுக்கு இன்ன உணர்ச்சி இன்ன நிலையில்
இவ்வாறு பிறக்கும் என்று எதிர்பார்க்க முடியாதது போலவே, சிறந்த ஓவியக்
கலைஞனின் கைப்பட்ட எண்ணம் இன்ன காரணத்தால் இன்னவாறு அமையும் என்று
எவரும் எதிர்பார்க்க முடியாது. உணர்ச்சிவேகத்தில் பேசும் சொற்பொழிவாளனுக்கு
முன்பு கருதாத புதிய புதிய கருத்துக்கள் பிறப்பது போலவே, கலைஞனுக்கும்
தொடங்கும்போது இல்லாத புதிய புதிய உண்மைகள் புலனாகும். அவன் பேசத்
தொடங்கும்போது எண்ணி அமைத்ததற்கும் பேசி முடித்துக் கண்டதற்கும் எவ்வளவோ
வேற்றுமை இருப்பது போலவே, கலைஞன் அமைக்க எண்ணிய உருவத்திற்கும்
அமைத்து முடிந்த