பக்கம் எண் :

140 இலக்கிய ஆராய்ச்சி
 
உருவத்திற்கும் எவ்வளவோ வேறுபாடு இருக்கும். கலைமுயற்சியில் இருக்கும்போது
அவன் தன்னை மறக்கிறான்; அவனை உணர்ச்சியே இயக்குகிறது.
 
     பாட்டும் ஒரு கலை; உயர்ந்த கலை. அது சொற்பொழிவு முதலிய கலைகளைப்
போல் கேட்டவுடனே உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்துவதும் அன்று; ஓவியம், சிற்பம்
போல் தன்னை நாடினோர் எல்லோரையும் கவர்வதும் அன்று; மெல்ல மெல்ல,
நவில்தொறும் நயம் பயப்பது; பண்பட்ட மிகச் சிலர்க்கே பயன் தருவது. ஆயினும்
இதற்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஓவியங்களும், சிற்பங்களும் பெற்றுள்ள
வாழ்நாளைவிட இதன் வாழ்நாள் பல மடங்கு மிகுதியாகும். ஒரு நாட்டின் நாகரிகச்
சிறப்புக்கள் எல்லாம் அழிந்த பிறகும் அழியாமல் நிற்கவல்ல தனிச் சிறப்பு இந்த
பாட்டுக் கலைக்கு உண்டு.
 
     விளைக்கும் பயனிலும் வாழும் காலத்திலும் இவ்வாறு வேறுபாடு இருந்தபோதிலும்
பிறக்கும் முறையில் இந்தப் பாட்டுக் கலை மற்றக் கலைகளைப் போன்றதே. நினைந்து
நினைந்து உணர்ந்து உணர்ந்து எழுந்த கலையே இதுவும். கவிஞன் பாடத் தொடங்கும்
போது எவ்வாறு முடிப்போம் என்பதை அறியாமலே தொடங்குகிறான். அவன் தன்னை
மறக்கிறான்; உணர்ச்சி அவனை இயக்குகிறது; பாட்டு அமைகிறது; பிறகு கவிஞனே
அதைக் கண்டு வியக்கிறான். இவ்வகையில் மற்றக் கலைகளுக்கும் இதற்கும் வேறுபாடு
இல்லை.
 
     "தூய பாட்டு என்பது முன்னமே எண்ணித் தெளிவாக்கிக் கொண்ட பொருளைப்
பற்றி அணிபெறக் கூறுவது அன்று. தெளிவுபடாத கற்பனைக் கருத்து. தெளிவாகத்
தோன்றி விளக்குமாறு உந்திக்கொண்டு எழும் உணர்ச்சியில் பிறப்பதே பாட்டு. தான்
சொல்லக் கருதியது இன்னதெனத் தெரியுமானால் கவிஞன் ஏன் பாட்டு