பக்கம் எண் :

144 இலக்கிய ஆராய்ச்சி
 
செய்வதில்லை. எண்ணங்களைச் சொல்வடிவாக எண்ணுகிறாள்; சொற்களைக் கை
தானாகவே எழுதிவிடுகிறது.
 
     வளர்ந்து பயின்ற பிறகு எழுதும்போது தயக்கமோ முயற்சியோ நேர்ந்தால்,
கையில் ஏதேனும் புண்பட்டு வலிப்பாக இருக்கலாம்; அல்லது முதுமை காரணமான
நடுக்கமாக இருக்கலாம்.
 
     இலக்கணக் கல்வியும் அப்படித்தான். நல்ல எழுத்தாள னாகின்றவன் முதல்
முதலில் இலக்கண விதிகளை முயன்று கற்றுத் தேர்கிறான்; அந்த விதிகளை நினைவில்
கொண்டு பிழை நேராமல் காத்துக்கொண்டு எழுத முயல்கின்றான். இந்தத் துறையில்
பழகிய பிறகு சில ஆண்டுகள் கழித்தபின், கட்டுரையோ கதையோ எழுதும்போது
அவன் இலக்கண விதிகளை நினைப்பது இல்லை; பிழையில்லாமல் எழுதுவது அவனுக்கு
இயற்கையாகி விடுகின்றது. அவன் எழுதுவன எவையும் பிழையற்றவை, எதிர்கால
இலக்கணத்திற்கு இலக்கியமாகக் கொள்ளத் தக்கவை என்று போற்றப்படும் நிலைமை
அடைகிறான்.
 
     கற்றுத் தேர்ந்த ஒருவன் கட்டுரையோ கதையோ எழுதும்போது
தயங்குவானானால், அவன் கற்ற இலக்கணத்தில் ஏதேனும் குறை இருக்க வேண்டும்;
அதனால் தான் அவனுடைய மூளையோடு இயற்கையாக ஒன்றுபடாமல் அந்த
இலக்கணம் விலகி நிற்கிறது. அல்லது, எழுதுவதற்கு வேண்டிய கருத்துக் குறைந்த
நிலைமையாக இருக்க வேண்டும்.
 
     எடுத்து அடிவைக்கும் பயிற்சி இயற்கையாக அமைவது போல், வளைந்தும்
நீட்டியும் எழுத்துக்களை எழுதும் திறமை இயற்கையாகிவிடுவது போல், சொற்களையும்
சொற்றொடர்களையும் மொழிமுறைப்படி, இலக்கணப்படி, அமைத்து எழுதும் புலமையும்
இயற்கையாக அமையவேண்டும்.