பக்கம் எண் :

16 இலக்கிய ஆராய்ச்சி
 
படமெடுத்துவிடும். ஓவியக் கலைஞரோ, தாம் உணர்த்த வேண்டிய உணர்வுக்கு அந்த
மாட்டெலும்பும் பிறவும் வேண்டியிருந்தால் தான் தீட்டுவர். 
 
     ஆங்கில அறிஞர் டாக்டர் ஜான்ஸனுடைய வரலாற்றை விடாமல் முழுதுமாகக்
கூறியிருந்தால், அவர் நாள்தோறும் பல் துலக்கியது முதல் குளித்தல், உண்ணல், பருகல்
வரையில் எல்லாவற்றையும் விடாமல் எழுதியிருக்க வேண்டும். அப்படி ஒரு நூல்
எழுதியிருந்தால் அந்த நூல் இன்று வரையில் நிலவி வாழ்ந்திருக்க முடியாது;
வாழ்ந்திருந்தாலும் சிறந்ததாகப் போற்றிப் படிக்கப்படாமல் ஒதுக்கப்பட்டிருக்கும்.
அவருடைய வரலாறாகப் பாஸ்வேல் (Boswel) என்பார் எழுதிய 'வாழ்க்கை' என்னும்
நூல் சிறப்போடு வாழ்கின்றது. வாழ்க்கை வரலாற்று நூல்களில் தலைசிறந்ததாகப்
போற்றப்படுகின்றது. காரணம் என்ன? அந்நூலில் வேண்டாத பகுதிகள் இல்லை;
வேண்டியவை மட்டும் உள்ளன. அறிஞர் ராபர்ட் லிண்ட் என்பவர் கூறுவது போல்
ஜான்ஸனுடைய வாழ்க்கையை எழுதிய பாஸ்வெல் அவருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளில்
சுவையற்றவைகளை விட்டுச் சுவையானவற்றை மட்டும் அழகுபடத்
தொகுத்திருப்பதாலேயே அது சிறந்ததாக விளங்குகிறது. புறநானூறும் அத்தகையதுதான்.
     உண்மையாக வருந்த வேண்டிய காரணம் வேறு சில உள்ளன. பழந்தமிழ்நாட்டு
நிகழ்ச்சிகளாகப் புலவர்கள் பாடியவை புறநானூற்றில் உள்ள நானூறு பாடல்கள் மட்டும்
அல்ல. ஆயிரக்கணக்கான பாடல்களைக் கண்டு, அவற்றுள் மிகப் பலவற்றை வேண்டா
என விட்டு நான்கு நூறு பாடல்களையே பிற்காலத்தார் எடுத்துச் சேர்த்தனர். அவ்வாறு
தொகுத்தபோது அவருடைய கைக்கும் செவிக்கும் எட்டாமல் நாட்டு மூலைமுடுக்குகளில்
ஒதுங்கியிருந்து பிறகு கேட்பாரற்ற காலத்தில் காவிரி வெள்ளத்திற்கும் வையைப்
பெருக்கிற்கும் பொருநை