பக்கம் எண் :

22. உயர்வும் தாழ்வும்  
 
      பிறரைப் பற்றிய செய்திகளை அறிவதில் மனிதனுக்குத் தீராத வேட்கை
இருக்கிறது. இந்த வேட்கை என்றும் இருக்கிறது. இது இயல்பாகவே மனிதனுக்கு
அமைந்திருக்கிறது. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள், என்ன சொல்கிறார்கள், எப்படிப்
பழகுகிறார்கள், எப்படித் தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்பனவற்றை அறிய
வேண்டும் என்ற ஆசை எல்லா மனிதரிடத்திலும் இருக்கக் காண்கிறோம். இந்த
ஆசையைப் பொறுத்த வரையில் சாதி, மத, நிற வேறுபாடுகள் ஒன்றும் காணோம்.
மனிதர் எல்லோரைப் பற்றியும் அறிய வேண்டும் என்ற ஆசை எல்லா நாட்டு
மனிதர்க்கும் இருக்கிறது. வெளி நாடுகளுக்கும் வெளியூர்களுக்கும் போய்ச் சுற்றி
வருகிறவர்கள் வேறு சில பயன்களைக் கருதி போய்வரலாம்; ஆயினும் அவர்கள்
அவற்றோடு இந்த ஒரு பயனையும் பெற்று மகிழ்கிறார்கள்; அதாவது, மற்ற ஊர்களிலும்
மற்ற நாடுகளிலும் உள்ள மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி அறிய விரும்பும்
வேட்கையைத் தணித்துக் கொள்கிறார்கள்.
 
     பொதுவாக மற்றவர்களைப் பற்றி அறிய விரும்பும் இந்த வேட்கையிலும், சில
சிறப்பு வகைகள் உண்டு. முன்பு பழகியறியாத மனிதர்களைப் பற்றி அறிய விரும்பும்
வேட்கையைவிட, பழகியறிந்த மனிதர்களின் சில செயல்களையும் சொற்களையும்
அறிவதில் உள்ள