பக்கம் எண் :

170 இலக்கிய ஆராய்ச்சி
 
வேட்கை மிகுதியாகும். அயலூராரின் செய்திகளை அறிவதைவிட, உள்ளூரார் சிலரின்
செய்திகளை அறிவதில் வேட்கை மிகுதியாக இருப்பதற்கும் பக்கத்துத் தெருவினரைப்
பற்றிய செய்திகளை அறிவதில் ஆர்வம் மிகுதியாக இருப்பதற்கும் காரணம் அதுவே
ஆகும். எல்லோரும் அறிய வெளியான செய்திகளைவிட, யாரும் அறியாமல்
வெளிப்படாமல் கிடக்கும் (இரகசியமான) செய்திகளை அறிவதில் மனிதரின் மனம் மிக்க
விருப்பம் கொள்வதும் காணலாம். உண்பது உறங்குவது முதலான வாழ்க்கையின்
பகுதிகளைவிட, வாழ்க்கையைப் பெரிதும் மாற்றவல்ல காதல், கொள்ளை, கொலை
முதலிய பகுதிகளை அறிவதில் உள்ள வேட்கை மிகுதியாக இருப்பதும் காணலாம்.
 
     ஆகவே, பொதுவாகப் பிறரைப் பற்றி அறிய விரும்பும் வேட்கை, பழகி
அறிந்தவற்றைப் பற்றியே மேலும் அறிய விரும்பும் வேட்கை, அவர்கள் தமக்குள்
மறைந்திருக்கும் செய்திகளைப் பற்றி அறிய விரும்பும் வேட்கை, வாழ்க்கையைப்
பெரிதும் மாற்ற வல்ல காதல் முதலிய செய்திகளை அறிய விரும்பும் வேட்கை என்று
படிப்படியாக வேட்கையின் அளவு மிகுந்து செல்வதைக் காணலாம்.
 
     இவ்வாறு பிறர் செய்தி அறிவதில் உள்ள வேட்கை மனிதனுக்கு இயல்பாகவே
அமைந்திருப்பதால், அவன் பெற்ற நன்மையும் உண்டு; தீமையும் உண்டு. பிறநாட்டு
மக்களின் பழக்கவழக்கங்களை அறிந்து அவற்றில் நல்லவற்றை மேற்கொள்ளுதல்.
அதனால் நாகரிகத்தில் உயர்தல், பிறர் கையாளும் கருவிகளைப் பார்த்து அவைகளைத்
தானும் படைத்துக் கொண்டு தொழில் பெருக்கிப் பயன் அடைதல், பிறநாட்டு
அரசியலைப் பார்த்துத் தானும் அரசியலில் புதுவழிகளை அமைத்து முன்னேறுதல்,
பிறநாட்டு வழிபாட்டு முறைகளைக் கண்டு