பக்கம் எண் :

182 இலக்கிய ஆராய்ச்சி
 
அமைப்பையும் போற்றி மகிழ்தல் போன்றதே ஆகும். நாடகம் தொடங்கும் போது
இவையும் நினைவில் பதியலாம். ஆனால், உணர்ச்சியுடன் நாடகம் நடிக்கப்படும் போது
இவற்றை மறந்து ஈடுபடுதல் வேண்டும். அவ்வாறே காவியம் கற்கத் தொடங்குவார்க்குச்
சொல்லாராய்ச்சியும் வரலாற்று ஆராய்ச்சியும் துணைக்கருவிகளாக அமையும். கற்கப்
பயின்ற பின், அந்தக் கருவிகளை மறக்கும் நிலை எய்தல் வேண்டும்.
 
     கலைப் பயனைப் பெறுதற்கு இன்றியமையாத மற்றொன்று அனுபவச் செல்வம்.
நாடக மேடையில் நடப்பவற்றை முதியவர் ஒருவரும் பார்க்கிறார்; சிறுவன் ஒருவனும்
பார்க்கிறான். கண்ணகி மதுரையின் மேற்கு வாயிலின் வழியாக வெளியேறியபோது,
"கிழக்கு வாயிலில் புகுந்த போது கணவரோடு புகுந்தேன். இப்போது மேற்கு வாயிலின்
வழியாக வெளியேறும்போது தனியே செல்கின்றேன்" என்று பெருமூச்சுவிட்டு
வளையல்களை உடைக்கும் காட்சி வரும்போது முதியவர் பெருமூச்சு விடுகிறார்;
அவருடைய உள்ளம் உருகுகிறது. ஆனால், அதே காட்சியைப் பார்க்கும் சிறுவன்,
என்னவோ சொல்கிறாள் என்று புறக்கணிக்கின்றான்; கையில் உள்ள வளையல்களை
உடைக்கிறாள் என்றும், பைத்தியக்காரி என்றும் எண்ணுகிறான். இருவருக்கும் கட்புலன்
உள்ளது; ஒளி பொதுவாகவே உள்ளது; நாடகமேடையும் இருவருக்கும் பொதுவாகவே
உள்ளது. ஆயினும், முதியவர் பெருமூச்சுவிட்டு உள்ளம் குழைகிறார்; சிறுவன்
என்னவோ எண்ணிப் புறக்கணிக்கிறான். காரணம் என்ன? நாடக மேடையில்
உணர்த்தப்படும் உணர்ச்சி சிறுவனின் குறைந்த அனுபவத்திற்கு எட்டவில்லை. பிரிவுத்
துன்பம் என்பதை எவ்வெவ் வகையிலோ முதியவர் அனுபவித்திருக்கிறார். சிறுவன்
இன்னும் அதைத் தன் வாழ்க்கையில் உணரவில்லை. தம் தம் வாழ்க்கையின்