பக்கம் எண் :

20 இலக்கிய ஆராய்ச்சி
 
உருவகப்படுத்திப் பாராட்டிக் கொள்வதில் அவர்கள் மகிழ்ச்சி கொண்டிருந்தனர்.
கோவூர்கிழார், ஒளவையார், மருதன் இளநாகனார் ஆகிய புலவர் பெருமக்களின்
பாடல்கள் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. 
 
     புலவரைப் பற்றிக் கோவூர்கிழார் குறிப்பிடும்போது, 'புலனுழுதுண்மார்'
(புறநானூறு-46) - அறிவால் உழுது உண்பவர் - என்று கூறியுள்ளார். வண்மையாளர்
செவியில் சிறந்த சொற்களை விதைத்தல் 'வள்ளியோர் செவி முதல் வயங்குமொழி
வித்தி'
(புறநானூறு-206) என்று புலவர் சொற்களை விதைக்குமிடத்தைக்
குறிப்பிட்டுள்ளார் ஒளவையார். தீய சொற்களாகிய களை நீக்கப்பட்ட செவிகளே
வயல்கள் என்றும், புலவரின் அறிவு வாய்ந்த நாவே ஏர் என்றும், புதிய புதிய
கல்வியின்பமே இந்த உழவின் விளைவு என்றும் மருதனிளநாகனார் சிறிது விரிவாகப்
பாடியுள்ளார். 
 
 

 

செதுமொழி சீத்த செவிசெறு வாக
முதுமொழி நீராப் புலன்நா உழவர்
புதுமொழி கூட்டுண்ணும்.

(கலித்தொகை, 68)
 

     புலமைத் தொழிலை உழவாக உருவகப்படுத்திக் காண்பதோடு, தொழில்முறையை
ஒப்பிட்டுக் காண்பதில் பயன் உண்டு. உழவுத்தொழிலில் தொன்றுதொட்டுக் கையாண்டு
வந்த முறைகள் பல நம் நாட்டவருக்குத் தெரியும். அவற்றுள் சில பழமொழிகளாக
வழங்குமளவிற்குச் செல்வாக்குப் பெற்றுவிட்டன. "அகல உழுவதை விட ஆழ உழுவது
நல்லது" என்பது அத்தகைய ஒரு பழமொழி. ஆழ உழுவதால், விதைக்கும் வித்து
நன்றாக வேரூன்றவும் நிலத்தினடியில் உள்ள சத்துக்களைப் பயிர் நன்கு பெற்றுச்
செழித்து வளரவும் முடியும்; உழவனுடைய முயற்சியும் போதிய பயன் தரும். அகல
உழுவதால் பயிர் செழிக்காது, பயன் நிரம்பாது, முயற்சி வீணாகும்