பக்கம் எண் :

  4. நல்ல நூல்
 
     புகைவண்டி நிலையத்தில் இருவர் பேசிப் பழகுகின்றனர். சிறிது நேரத்தில் வண்டி
வருகின்றது. இருவரும் ஏறி ஓர் இடத்தில் உட்கார்ந்து தொடர்ந்து பேசுகின்றனர்.
வண்டி நகர்கின்றது. ஐம்பது அறுபது மைல் கடந்து ஒரு நிலையத்தில் நிற்கும் போது
அவர்களுள் ஒருவர் தம் பெட்டியை எடுத்துக்கொண்டு இறங்குகிறார். சிறிதும் வருத்தம்
இல்லாமல், "நான் போய் வரட்டுமா?" என்று அந்த நண்பரை விடை கேட்கின்றார்.
"சரி போய் விட்டு வாங்கள். இங்கேதானா உங்கள் ஊர்?" என்று வண்டியில் இருக்கும்
நண்பரும் கவலையில்லாமல் விடை கொடுக்கின்றார். வண்டி புறப்படுகின்றது. இருவரும்
பிரிந்து வேறு வேறு இடங்களை நாடிச் செல்கின்றார்கள். 'பிரிந்தோமே' என்ற துயரம்
ஒருவர் உள்ளத்திலும் இல்லை. சில நாழிகைக்குள் ஒருவர் மற்றவரைப் பற்றி
நினைப்பதில்லை. அடியோடு மறந்து போகின்றனர். இதுவும் நட்புதான். 
 
     நட்பில் இன்னொரு வகை உண்டு. நாள்தோறும் குறித்த நேரத்தில் பெரும்பாலும்
மாலை வேளையில் நண்பர் கூடிப் பேசுவர். தம் தம் குறைகளையும் இடர்களையும்
குறித்துப் பேசாமல் பெரும்பாலும் மற்றவர்களின் குற்றங்களை எடுத்துப் பேசி எள்ளி
நகையாடிப் பொழுது போக்குவார்கள். இத்தகைய பேச்சால் ஒருவரை ஒருவர்
திருத்தவோ உயர்த்தவோ முடியாது. ஆனாலும் அந்த