பக்கம் எண் :

நல்ல நூல் 29
 
வேளைக்குச் சிரித்துச் சிரித்துக் காலத்தைக் கழிக்க முயல்வார்கள். சில நாட்களில்
இருவருக்குமே சோர்வு ஏற்பட்டுவிடுமானால இருவரும் சேர்ந்து வேறொன்றன்
துணையை நாடுவார்கள். அவ்வாறு துணையாக நாடுகின்ற பொருள் பெரும்பாலும்
தூண்டுதல் செய்யும் பொருளாகவோ மயக்கம் தரும் பொருளாகவோ இருக்கும். (கள்,
கஞ்சா, தீய கூத்து, விலைமாதர் உறவு முதலியவை அப்படி ஏற்பட்டவைகளே.)
இவர்களிடத்தில் முகத்தளவில் சிரிக்கும் சிரிப்பும் வாழ்க்கையை மறக்கும் முயற்சியும்
காணப்படுமே தவிரச் சீர்ப்படுத்தும் முயற்சி காணப்படாது. இவர்கள் ஒருவரோடொருவர்
பழகும் பழக்கம் பெரும்பாலும் நீடிப்பதில்லை; உள்ளன்பு வளர்வதில்லை.
 
     அறிவுடையவர்களாய் நெறியோடு வாழ்கின்றவர்கள் தேடிக்கொள்ளும் நட்பு வேறு
வகையானது. அவர்கள் கூடிப் பேசும்போதும், தனித்து எண்ணும்போதும் ஒருவர்
மற்றொருவரின் நன்மையே நாடுவார்கள்; ஒருவருக்கு ஒருவர் உதவியாக வாழ்வதிலேயே
கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். சிறிது நேரம் வேடிக்கையாகப் பொழுது
போக்குவது அவர்களுக்குக் குறிக்கோளாக இருப்பதில்லை. நாளைக் கடமை, எதிர்காலக்
கடமை, இன்றுள்ள இடர்ப்பாட்டை வெல்லும் முயற்சி - இவற்றைப் பேசித் துன்பத்தைப்
பங்கிட்டுக் கொள்வதிலேயே அவர்கள் முந்தி நிற்பார்கள். உண்மையான இன்பம்
வாய்த்தபோது, ஆரவாரம் இல்லாமல் பகட்டு - இல்லாமல் - மகிழ்ச்சியோடு கலந்து
கொள்வார்கள். அந்த மகிழ்ச்சி உண்மை மகிழ்ச்சி ஆகையால் உள்ளத்தில் ஊறி
நிற்கும். சிறிதளவே புறத்தில் புலனாகும். ஒருவர் தவறும் நிலைமை நேர்ந்தால் மற்றவர்
தயங்காமல் தடுத்துத் திருத்த முனைவதும் இத்தகைய நண்பர் இயல்பாகும். அதனால்
நண்பருடைய மகிழ்ச்சி குறையுமே என்றும், மனம் புண்படுமே என்றும் கவலைப்
படாமல் கடிந்துரைப்பது