பக்கம் எண் :

30 இலக்கிய ஆராய்ச்சி
 
வழக்கமாகும். இத்தகைய நண்பர்கள் உதவி செய்யும்போது விரைவது போலவே
திருத்தும் போதும் விரைவார்கள்.
 
நகுதற் பொருட்டன்று நட்டல்: மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு
  முகநக நட்பது நட்பன்று; நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு

(திரு. 784, 786)

என்று வள்ளுவர் சிறந்த நட்பைப் பற்றித் தெளிவாக விளக்கியுள்ளார்.
 
     நட்பைப் பற்றி மேலும் கூறும்போது, கற்கக் கற்க நயம் பயக்கும் நூல் போல்,
பழகப் பழக இனிய நன்மை மிக விளைவிப்பதே சிறந்த நட்பு என்று கூறியுள்ளார்.
 
  நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு

(திரு. 783)

     இவ்வாறு நூலையும் நட்பையும் தொடர்பு படுத்தி விளக்கினமையால், சிறந்த
நட்பைப் போல் உயர்ந்த நூல் இன்னது என்பதையும் ஆராய்ந்து அறியலாம்.
 
     சில நூல்களை ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் வைத்திருந்து
ஒரு பகுதியைப் படித்து முடித்த பிறகு கவலை இல்லாமல் மறந்துவிடலாம். அவைகள்,
புகைவண்டியில் பயணம் செய்து நட்புக் கொள்ளப் படுகின்றவர்களைப் போன்றவைகள்.
 
     சில நூல்கள் கற்போரைத் திருத்த முடியாது; எண்ணச் செய்யவும் முடியாது.
படிக்கும் நேரத்தில் இன்பம் பயக்கும். தொடர்ந்து படித்தால் மிகுதியான பயன் காண
முடியாது. அதற்கு மாறாகக் கடமையை மறக்கச் செய்து மனச் சான்றையும் அடங்கச்
செய்து பொழுதைப் போக்குமாறு தூண்டும்.