பக்கம் எண் :

38 இலக்கிய ஆராய்ச்சி
 
ஷேக்ஸ்பியரைப் பற்றி ஒன்றும் தெரியாத மக்களும் இன்று அவரை மதிக்கின்றார்கள்;
அவருடைய நூல்களை வாங்கி அழகாக வைத்துக் காப்பாற்றுகின்றார்கள்; ஹாம்லட்
போன்ற நாடகங்களை ஆராய்ந்து உணர முடியாத நிலையில் இருந்தாலும், அவற்றை
உயர்ந்த நாடகங்கள் என்று சொல்வதை நாகரிகமாகக் கொண்டிருக்கின்றார்கள்.
எல்லாம், அறிஞர்கள் பல தலைமுறையாகச் செய்துவந்த விடாமுயற்சியின் பயன்,
தமிழகத்திலும் சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு முதலியவைகளும்
இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கால வெள்ளத்தை நீந்தி இன்னும் பெருமையோடு
விளங்குகின்றன என்றால், காரணம் என்ன? இரண்டாயிரம் ஆண்டுகளாகப்
பொதுமக்கள் போற்றி வந்தார்கள் என்பது அன்று; இரண்டாயிரம் ஆண்டுகளாக
அறிஞர்கள் விடாமுயற்சி கொண்டு அவற்றின் பெருமையைப் பறைசாற்றி வந்த
பெருந்தொண்டே காரணம் ஆகும். அறிஞர்கள் இவ்வாறு தொண்டாற்றாமல்
விட்டுவிட்டிருப்பார்களானால், எந்த உயர்ந்த நூலும் உலகத்தில் இதுவரையில்
வாழ்ந்திருக்க முடியாது; சுவையற்றவை என்று சிலவற்றை மறந்து விட்டிருப்பார்கள்.
ஆனால் அறிஞர்களின் தூண்டுதலாலும் பொதுமக்களின் கண்மூடிப் போற்றுதலாலுமே,
அழிவுக்கும் மறப்புக்கும் துறப்புக்கும் இரையாகாமல் பல நல்ல நூல்கள் நம் நாட்டிலும்
பிற நாடுகளிலும் காலங் கடந்து வாழ்ந்து வருகின்றன.
 
      இந்த உயர்ந்த நூல்கள் தோன்றிய காலத்தில் வேறு எத்தனையோ சிறப்பற்ற
நூல்கள் உடன் தோன்றியிருக்கும். அவற்றுள் மிக மட்டமானவற்றை அக்காலத்து
மக்கள் பெரிதும் விரும்பிப் பாராட்டியிருக்கக் கூடும். ஆனால், ஆழ்ந்த கலையுணர்வு
இல்லாத பொதுமக்களின் பாராட்டு அவ்வப்போது தோன்றி மறையும் பாராட்டுத் தானே!
அவற்றை அக்காலத்து அறிஞர் ஒரு சிலர் கண்டும் கேட்டும்