பக்கம் எண் :

சங்கப் பலகை 39
 
தம் கடமையை விடாமல் செய்து, தம் ஆராய்ச்சியால் கொண்ட உண்மைக் கருத்தை
அவ்வப்போது வெளியிட்டிருப்பர். அடுத்த தலைமுறையில் அறிஞர்களின் ஆராய்ச்சிக்
கருத்து மட்டும் வாழ்ந்திருக்கும்; ஆனால், பொதுமக்களின் நிலையில்லாத பாராட்டு,
தோன்றியது போலவே விரைந்து மறைந்திருக்கும். பாராட்டு மறைந்ததும், சிறப்பற்ற
நூல்களும் உடன் மறைந்திருக்கும். அப்போதெல்லாம் ஒதுங்கி ஒரு மூலையில் கிடந்த
உயர்ந்த நூலோ, முன்னிலும் உயர்வாக அறிஞரால் போற்றப்பட்டுத்
தலையெடுத்திருக்கும். எடுத்துக்காட்டாகத் திருக்குறளையே காண்போம், அதைப் பற்றி
வழங்கும் கதை; சங்கப் பலகையில் இருந்த புலவர்களை எல்லாம் பொய்கையில்
கவிழ்த்துத் தான் மட்டும் தனித்து விளங்கியதாகக் கூறப்படும். கற்பனை- இந்த
உண்மையையே விளக்குவதாகும். திருவள்ளுவருக்கு அடுத்த தலைமுறையிலே வந்த
கூலவாணிகன் சாத்தனார் அவரைப் 'பொய்யில் புலவன்' எனப் போற்றுவதையும்
காணலாம்.
 
     இவ்வாறு மட்ட நூல்கள் உடனே போற்றப்படுவதற்கும் உயர்ந்த நூல்கள்
பொறுத்துப் போற்றப்படுவதற்கும் காரணம் என்ன?
 
     ஆங்கில அறிஞர் சி.இ.எம்.ஜோட் என்பவர் (C.E.M.Joad) பொதுவாகக்
கலையைப் பற்றிக் கூறும் கருத்து இங்குப் பொருந்துவதாகும்; "உயர்கலை
நிகழ்காலத்தைவிட எதிர்காலத்திற்கு உரியதாக விளங்குகின்றது. அதில்
புலப்படுத்தப்பெறும் அனுபவம், பெரும்பாலோர் கண்டு கேட்டு உற்று உணர்ந்து
நுகர்ந்து வாழும் அனுபவத்தை விட உயர்வகையானதாக உள்ளது. அதனால் அதற்குக்
கீழ்ப்பட்ட சாதாரண நிலையில் கண்டு கேட்டு உணர்ந்து வாழ்ந்து பெறும்
அனுபவமுடைய பெரும்பாலோராகிய நமக்கு அத்தகைய உயர்கலை சற்றும்
பொருந்தாததாகவும்