பக்கம் எண் :

56 இலக்கிய ஆராய்ச்சி
 
வாழ்க்கைக் கலைஞரை நாடிப் பயன் பெறக் காண்கின்றோம்.
 
     திருவள்ளுவரின் காலத்தில் எத்தனையோ வேடிக்கை நூல்கள், பொழுதுபோக்கு
நூல்கள், சுவை மிகுந்தனவாக வெளிவந்திருக்கக் கூடும். ஆனால், அவைகள் எல்லாம்
அங்கங்கே நின்று அவ்வவ்வாறே மறைந்து போய்விட்டன. திருவள்ளுவரின் திருக்குறள்
மட்டும் ஒரு மூலையிலிருந்து வெளியே மெல்லத் தலைகாட்டிப் படிப்படியாக
எங்கெங்கும் பரவி என்றென்றும் நிலைபெறும் வாழ்வை அடைந்து விட்டது. இதுவே
தாயைப் போன்ற வாழ்க்கைக் கலைஞர் பெறும் வெற்றியாகும். உடலுக்கு நோயைப்
படைத்துத் தடுத்தாட்கொள்ளும் இயற்கையை நாம் சில வேளைகளில் வாழ்த்துவது
போல், மனத்திற்குப் போராட்டத்தைப் படைத்து மக்களை வாழ்க்கையில் தடுத்தாட்
கொள்ளும் அறத்தின் ஆட்சி முறையை வாழ்த்த வேண்டும்.
 
     இல்லையானால் என்ன ஆகும்?
 
     காணுமிடமெல்லாம் நெருஞ்சிலும் கோரையும் அறுகம் புல்லும் செழித்து ஓங்கி
வளர்வதானால் வாழையும் தென்னையும் ஆல மரமும் உலகில் இடம் பெற முடியுமா?
நெருஞ்சில் கோரை அறுகு முதலியவற்றிற்கு வேகமான வளர்ச்சி தந்த இயற்கை
அவற்றிற்கு நிலை பேறான வாழ்வு தராமலிருப்பதற்காக வாழ்த்துக் கூற வேண்டும்
அன்றோ?
 
     கலையுலகிலும் இந்த உண்மையையே காண்கிறோம். மட்டமான கலை, சுவை
மிக்கதாகவும் கவர்ச்சி மிக்கதாகவும் இருக்கின்றது; ஆனால் நிலைபேறு இல்லாதது.
ஆகையால், விரைவில் வளர்ந்து விரைவில் அழிவதாக உள்ளது. மட்டமான
எத்தனையோ நாடகங்கள், எத்தனையோ காவியங்கள் அவ்வக் காலத்தில் கண்ட
இடமெல்லாம் பரவி வேகமாக வளர்கின்றன. ஆனால்,