பக்கம் எண் :

 கலைஞனின் தியாகம் 59
 
வெறுப்பிற்கும் புகழுக்கும் விருப்பிற்கும் இடம் தந்து பாடும் பாட்டும் பலராலும்
பாராட்டப்படுவது எளிது. ஆனால்,
 
  யாதும் ஊரே யாவரும் கேளிர்....
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

(புறம்: 192)
 

என்று பொதுமை பாடும் பாட்டு அவ்வளவு எளிதில் பாராட்டுப் பெற முடியாது.
பூங்குன்றனார், தாயுமானவர் முதலானோர்கள் வாழ்ந்தகாலம் தூய்மைக்கும்
நடுநிலமைக்குமே இடம் தந்த சிறந்த பொற்காலம் என்று கூறவில்லை. அந்நாட்களிலும்
உயர்வற்றவை கண்ட இடமெல்லாம் பரந்து வளர்ந்திருக்கக் கூடும். ஆனால், அறத்தின்
ஆட்சி வலியது; வாழ்க்கையில் போராட்டத்தை ஏற்படுத்தித் தடுத்தாட்கொள்வது;
பொழுதுபோக்கில் மூழ்கியிருப்போரையும் திருத்தும் முறை உடையது.
 
     அவ்வாறு போராட்டத்தின் காரணத்தால் மக்கள் திருந்தி வரும்போதுதான்
உயர்ந்த கலைஞரின் கலைத் தொண்டு அவர்களுடைய உள்ளத்தைக் கவர்கின்றது.
அப்போது தான் அவர்களுடைய கலை, நாடிவந்த மக்களின் உள்ளத்தில் செழித்தோங்கி
வளர்கின்றது.
 
     சிற்றுண்டி வகைகளையே மேன்மேலும் நாடித் தின்னும் மக்களைக் காணும்போது
தாய் வருந்துகின்றாள்; திருத்த முயல்கின்றாள். ஆனால் அவர்கள் திருந்தாமை கண்டு
துறந்து விடுவதில்லை; அல்லது மக்களின் சுவையுணர்வை மட்டும் பொருட்படுத்தி
அவர்களின் விருப்பம் போல் தன் கடமையை மாற்றிக் கொள்வதும் இல்லை. தன்
நிலையில் நின்று தளராமல் தொண்டு செய்கின்றாள். மக்கள் ஓரளவு வளர்ச்சி
பெற்றபின், நோய் முதலிய காரணங்களால் அறிவு பெற்றபின், தாயின் உதவியை நாடித்
திருந்துகின்றனர். இதற்கிடையே தாய் செய்யும் தியாகம் எத்தகையது? தன் சமையல்
திறமை மக்கள்