பக்கம் எண் :

84 இலக்கிய ஆராய்ச்சி
 
இடையே உள்ள கால இடைவெளி ஒரு நூற்றாண்டு, இரு நூற்றாண்டு அல்ல;
இரண்டாயிரம் ஆண்டுகளாகும். இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்த பிறகும்
மறக்கப்படாமல் காவியம் இயற்றப்படும் அளவிற்குச் சிறந்த நிலையில் வாழ்ந்த
பாரிமுதலான பெருமக்களுக்கு, வாழ்ந்த காலத்திலோ அதை ஒட்டிய அண்மைக்
காலத்திலோ ஒரு நூல் எழவில்லை. ஆனால் தனித்தனிப் பாடல்கள் எழுந்தன;
அவற்றில் சில இன்றும் உள்ளன. முத்தாரமாக ஒன்றும் இல்லை; சிதறிய முத்துக்களாக
அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளன. அந்தத் தனி முத்துக்களிலும் எத்தனையோ
மறதி என்னும் மண்ணில் புதைந்து மறைந்தன.
 
     பாரியைப் பற்றி அந்தக் காலத்திலேயே தனிப் பாடல்களாகப் பாடியிருக்காமல்,
ஒரு காவியமாகப் பாடியிருந்தால் அவனுடைய வாழ்வையும் பண்பையும் விரிவாக
விளக்கும் இலக்கியமாக அது இருந்திருக்கும். கரிகால்வளவனைப் பற்றியும் அவ்வாறு
பெரிய நூல் தோன்றியிருப்பின். அதுவும் விரிவான இலக்கியமாகச் சிறந்திருக்கும்.
இன்று கரிகாலனைத் தலைவனாகக் கொண்ட தனிப்பாட்டுக்கள் பத்துப்பாட்டு என்னும்
பாடல்கள் தொகை நூலில் இரண்டு உள்ளன; அவை நீண்ட பாடல்கள். அவை
அல்லாமல் புறநானூற்றில் வரும் அகநானூறு முதலியவற்றில் காணப்படும் குறிப்புக்களும்
பல உள்ளன. ஆகவே அத்தகையவரைக் காவியத் தலைவர்களாகக் கொண்டு விரிந்த
நூல்கள் இயற்றப்பட்டிருப்பின் இன்று பழந்தமிழிலக்கியம் உலகத்திலேயே மிக்க
வளஞ்செறிந்த பழைய இலக்கியமாகத் திகழ்ந்திருக்கும். பொருநராற்றுப்படையும்
பட்டினப்பாலையும் நீண்ட பாட்டுக்களாக இருந்தும், கரிகாலன் வீரமும், கொடையும்
வாய்ந்த தக்கோனாக இருந்தும், இன்று தமிழ் நாட்டுப் பொதுமக்கள் அறிய