பக்கம் எண் :

மலரும் மாலையும் 89
 
உள்ளத்தில் ஒரு தனி உணர்ச்சியைப் பதிய வைக்கலாம். ஆனால் அது எளிதில்
மறைந்து போகும், மற்றோர் உணர்ச்சியைப் பதிய வைக்கலாம். அதுவும் மறைந்து
போகும். இவ்வாறு தனித்தனி உணர்ச்சிகள் ஒன்று மற்றொன்றுக்கு இடம் கொடுத்து
மறைந்து போவது, இயற்கை. ஆனால், தனி உணர்ச்சிகள் பலவற்றைத் தொடர்புபடுத்தி,
ஒரு வாழ்வின் கோவையாக உணர்த்தினால், அவை ஒன்றோடோன்று உறவு கொள்ளும்;
ஒன்று மற்றொன்றை நினைவூட்டும்; நினைவிலிருந்து ஒன்று மறையும்போது, மற்றொன்று
முன்வந்து நிற்கும். கோவலனுடைய வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாதவர். கண்ணகியின்
வீரத்திலாவது கற்பிலாவது உள்ளத்தைப் பறிகொடுத்துப் போற்றுவர். கண்ணகியின்
வாழ்வைப் போற்றாதவர் மாதவியின் ஆடல் பாடலிலாவது துணிந்து துறவிலாவது
ஆர்வம் கொள்வர். இவை எவற்றிலும் ஆர்வம் கொள்ளாதவர், ஒருகால் கானல்
வரியிலாவது குன்றக் குரவையிலாவது விருப்பம் கொள்வர். இவற்றிலும் பற்றுக்
கொள்ளாதவர் ஆங்காங்கு வரும் இயற்கை வருணனையிலாவது உள்ளம் செலுத்துவர்.
எவ்வாறேனும் சிலப்பதிகாரத்தில் ஒருவகைப் பயன் கண்டு காவியம் முழுமையும்
போற்றுவர்; மெல்ல மெல்ல மற்றப் பகுதிகளையும் கற்றுக் கொள்வர். இவ்வாறு முழு
நூலும் கற்பவரின் உள்ளத்தில் இடம் பெறச் செய்ய முடிவதால், இயற்றிய ஆசிரியரின்
நோக்கம் நிறைவேறிவிடும். ஆகவே தனி உணர்ச்சியை வடித்துக் கூறும் பாட்டின்
வாயிலாக எதிர்காலத்தில் ஒரு கொள்கையைப் பரப்ப முடியாமற் போக, பல வகை
உணர்ச்சிகளைத் தொடர்புபடுத்தித் தொகுத்த காவியத்தின் வாயிலாக ஒரு கொள்கையை
வருங்காலத்திலும் வாழவைக்க முடிகிறது. விரைவில் மறக்கக்கூடிய தனிப் பாட்டில் ஒரு
கொள்கையை உணர்த்திப் பரப்புதல், வாடிவிடும் தன்மை உள்ள