| தன்மை உள்ளது. புறக்கண் கண்ட காட்சிக்கு நுட்பமான உணர்ச்சி ஊட்டி அகக்கண் காணுமாறு செய்யும் ஆற்றலே அக் கலையாகும். விரும்புமாறு காணல் ஆயின், கலைஞர் இந்த அளவில் அமைவதில்லை. அவர்களின் உள்ளம், இட்ட இடத்தில் கிடக்கும் கல் போன்றது அன்று; ஒளியும் காற்றும் நாடி மேன்மேலும் வளரும் செடிகொடி போன்றது. ஆகவே, பொருள்களை உள்ளவாறு கண்டு அந்த அழகில் அமைதி அடைவதில்லை கலைஞரின் மனம்; பொருள்களை மேலும் அழகுபடுத்தி இன்னும் சிறந்த உலகத்தைப் படைக்க முயல்கிறது; அம்முயற்சி இடைவிடா முயற்சியாக உள்ளது. அதுவே அவர்களின் அகத்தெழுச்சிக்கு (Inspiration) காரணம் ஆகிறது. உள்ளது போதும் என்ற மனநிறைவு அவர்களுக்கு இல்லை. அம் மனநிலை ஏற்படின், கலையுணர்ச்சி தீர்ந்தது எனலாம்; புதியன படைக்கும் ஆற்றலும் அற்றது எனலாம். ஆகவே, உள்ளவாறு அமையும் கற்பனையில் கலைஞர்க்கு ஆர்வம் இல்லை என்றும், உள்ளம் விரும்புமாறு அமையும் கற்பனையிலேயே அவர்களுக்கு ஆர்வம் மிகுதி என்றும் கூறலாம்.1 தேனீக்கள் எல்லாப் பூக்களையும் நாடித் தேன் உறிஞ்சி வருகின்றன. எந்த மரத்திலேனும் கூடுகட்டித் தேன் சேர்க்கின்றன. ஆனால் அவ்வாறே - உள்ளவாறே - பாடக் கலைஞர்க்கு மனம் இல்லை. அவருடைய உள்ளம் உயர்ந்தவற்றை நாடுகிறது. உயர்ந்த பூக்களில் தேன் எடுத்து, உயர்ந்த மலையில் உயர்ந்த மரத்தில் கூடு கட்டித் தேன் சேர்ப்பதைப்பற்றி எண்ணுகிறது; ஆகவே உள்ளம் விழைந்தவாறு கற்பனை அமைகிறது. தாமரைப்பூக்களில் ஊதித்தேன் எடுக்கின்றன; உயர்ந்த மலையுச்சியில் சந்தன மரத்தில் கூடுகட்டிச் சேர்க்கின்றன என்கிறார். 1. It is just possible life imagine life exactly as it is; but the exciting thing is to imagine life as it might be; and it is then that imagination becomes and impulse capable of inspiring Poetry. - L. Abercrombie, Principles of Literary Criticism p. 87. |