| தாமரைத் தண்தாது ஊதி மீமிசைச் சாந்தின் தொடுத்த தீந்தேன்...* இது உள்ளவாறு அமைந்த கற்பனை அன்று; உள்ளம் விழைந்தவாறு அமைந்த கற்பனை ஆகும். கோங்கு, வேங்கை முதலிய மலர்கள் இங்கே இடம் பெறவில்லை. குறிஞ்சி; தேக்கு முதலிய மரங்களும் கூடு கட்டுவதற்கு அமையவில்லை. இவை அனைத்தும் உள்ளனவே; ஆயினும் கலைஞரின் உள்ளம் இவற்றை விட்டுத் தாமரையும் சந்தன மரமும் மட்டுமே கொண்டு விழைந்தவாறு கற்பனை அமையச் செய்கிறது. கூட்டலும் கழித்தலும் நாவல் மரத்தருகே பலவற்றைக் காண்கிறார் கலைஞர். கருநிற நாவற்பழங்கள் கீழே உதிர்தல், கருநிற வண்டுகள் அங்கும் இங்கும் பறந்து செல்லுதல், நிலத்தில் நண்டுகள் ஓடிச் சென்றது நாவற் பழங்களைத் தின்னுதல், நாரைகள் நண்டுகளைப் பற்றித் தின்னுதல் முதலான பலவற்றைக் காண்கிறார். ஆனால் அவற்றுள் சிலவற்றை மட்டும் தேர்ந்து தம் உள்ளம் விழைந்தவாறு ஒரு கற்பனை நாடகம் நடத்திக் காட்டுகிறார். ஒரு வண்டு நாவற்பழத்தைத் தன் இனமான கருவண்டு என்று கருதி அருகே சென்று சேர்கின்றது. அப்போது அதை வண்டு என்று உணராமல் நாவல்பழம் என்று கருதி நண்டு பற்றுகிறது. அதன் கூரிய நகங்களுக்கு இடையே சிக்குண்டு வருந்தும் வண்டின் ஒலி கேட்டு நாரை ஒன்று திரும்பிப் பார்த்து, அந்த நண்டைப் பற்றச் செல்கிறது. நாரையின் வருகையை உணர்ந்த நண்டு, வண்டை விட்டு ஓடிவிடுகிறது. வண்டு தப்பிப் பிழைக்கிறது. புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி கிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்செத்துப் பல்கால் அலவன் கொண்டகோட்கு அசாந்து கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் இரைதேர் நாரை எய்தி விடுக்கும்-1 நாவல் மரத்தருகே கண்ட எல்லாப் பொருள்களையும் கலைஞர் கூறியிருப்பாரானால் கற்பனை இவ்வாறு சிறந்திருக்காது. * நற். 1. நற்.35 |