| மட்டும் ஆழ்ந்து உணரப்படுவதால் மற்றவை அவ்வளவு தெளிவாக நிற்பது இல்லை. ஒரு பொருளின் ஒரு கூறு மட்டும் தெளிவாக நிற்பது இல்லை. ஒரு பொருளின் ஒரு கூறு மட்டும் தெளிவாக - மிகுதியாக - உணர்த்தப்பட, மற்றவை மங்குகின்றன. அல்லது மறைகின்றன. ஒன்றை எடுத்துக் காட்டுவதற்காக மற்றவற்றை வேண்டும் என்றே திரையிட்டு மறைப்பதாகக் கூறல் பொருந்தாது. உணர்ச்சியின் காரணமாக ஒன்று சிறந்து நிற்றலால் மற்றவை சிறப்பு இழந்து மறைகின்றன என்று கூறலாம். உடல் முழுமையும் உள்ளவாறே எழுதிக்காட்டினால், உடலின் நரம்புகள் தெளிவாக விளங்குவதில்லை; அதனால் நரம்புகளைப் பற்றி மட்டும் தெளிவாகக் காண விரும்புவோர்க்கு தசைகளையும் எலும்புகளையும் காட்டாமல் உடம்பின் அமைப்பை மட்டும் காட்டி அதனுள் எல்லா நரம்புகளையும் காட்டினால் பயன் உண்டு. அவ்வாறே எலும்புகளைப் பற்றித் தெளிவு பெற விரும்புவோர்க்கு, தசைகளையும் நரம்புகளையும் காட்டாமல் எலும்புகளை மட்டும் புலப்படுத்திப் படம் வரைதல் உண்டு. தசைநார்களைப் பற்றி நன்கு அறிய விரும்புவோர்க்கு, எலும்பும் நரம்பும் தோன்றாத வகையில் படம் வரைதல் உண்டு. எலும்பும் நரம்பும் இல்லாமல் தசைவடிவாக ஓர் உடம்பு எப்படி இருக்க முடியும் என்ற ஐயமும் ஆராய்ச்சியும் அங்கு எழுவதில்லை. இதே முறையைக் கற்பனைகளில் கையாள்வதால் தான், காவியம் முதலிய இலக்கிய வகைகள் சுவையும் தெளிவும் உடையன ஆகின்றன. இராமாயணத்தில் இலக்குமணன் மனைவி, பரதன் மனைவி, சத்துருக்குநன் மனைவி ஆகியோரின் பிரிவாற்றாமைத் துயரம் முதலியவற்றை விளக்கியிருப்பின் காவியத் தலைவியாகிய சீதை பற்றிய கற்பனை சிறப்பிழந்திருக்கும். காவியத்தைப் படைக்கும் புலவர் இதை வேண்டும் என்றே செய்கிறார் என்று சொல்லுதலும் இயலாது. அவருடைய ஆழ்ந்த உள்ளத்து உணர்ச்சி அவரை அறியாமலே அவருடைய கற்பனையை அவ்வாறு அமைத்து விடுகிறது எனலாம். துன்புற்று அழுதுகொண்டு வருகின்ற சிறுவன் தன் துன்ப மிகுதியைப் புலப்படுத்துகின்றானே அல்லாமல், தன் செயலையோ தன் செயலின் தீமையையோ பிறர் செயலின் நன்மையையோ நடுநிலையில் நின்று எடுத்துரைப்பது இல்லை; எடுத்துரைத்தல் இயலாது. சினம் கொண்ட சிறுவன் தன் சினத்தின |