| மிகுதியைப் புலப்படுத்துகின்றானே அல்லாமல் தன் குணம் குற்றங் களையும் பிறர் குணம் குற்றங்களையும் நடுநிலையில் நின்று கூறுவது இல்லை; கூறல் இயலாது. வழியில் ஒரு கல் தடுக்கி விரல் நொந்த ஒருவர், யாரோ அந்தக் கல்லை அங்கே இட்டதாக நோகிறாரே அல்லாமல் வழியைப் பார்த்து மெல்ல நடந்து செல்லாத தம் குறையை எண்ணிப் பார்ப்பது இல்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு தம் குறை பற்றிய எண்ணம் அவருக்கு வரலாம். ஆனால் உடனே வருவது இல்லை. உணர்ச்சியே அதற்குக் காரணம். அறிவு பலவற்றையும் அளந்து சீர்தூக்கிச் செல்வது; உணர்ச்சி, ஒன்றையே சிறப்பித்து - மிகுதிப் படுத்திச் செல்வதாகும். புனைந்து கூறுதல் மனைவி கணவனிடம் ஊடல் கொண்டு துன்புறுவதாக மேடையில் காட்டும்போது, அவருடைய முகத்தில் வெறுப்பும் சினமும் புலப்படுத்தலாம். சோர்வும் துன்பமும் புலப்படுத்தலாம். கண்கள் கலங்குவதாகக் காட்டலாம். இவ்வளவும் வாழ்க்கைக்கும் பொருந்தும்; கலைக்கும் பொருந்தும். ஆனால் கற்பனையால் மிகுதிப்படுத்தி மேடையில் காட்டும்போதோ கவிதையில் எழுதும்போதோ இந்த வரையறையுடன் நிற்பது இல்லை. நாட்டியக் கலையில் ஒருத்தி ஊடலால் துன்புற்றுக் கண்ணீர் வடிப்பதைக் காட்டும்போது, கண்ணீர் மிகப் பெருகுவதாகவும் முன்தானையால் கண்ணீரைத் துடைத்துப் பிழிவதாகவும் காட்டுதல் உண்டு. கற்பனை அவ்வாறு அறிவின் வரம்பு கடந்து செல்லும் போதும் சுவை உடையதாய்க் காண்போரை மகிழ்விக்கின்றது. உடலிலேயே ஒருவகை நடிப்பு உண்டு. அதற்கு நாட்டிய நங்கை கலைவடிவம் தரும் போது அந்தக் கற்பனை சுவை உடையதாய் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இவ்வளவு கண்ணீர் பெருகுமா, முன்தானையால் பிழிந்து விடும் அளவிற்குக் கண்ணீர் வடிவது உண்டா என்ற கேள்விகள் எழுவது இல்லை. மிகத் துன்புற்றுக் கண்ணீர் வடித்ததாக அவள் நடிக்கிறாள். கற்பனை காண்பவரால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கலையும் நாட்டியக் கலை ஆகையால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வாழ்வின் கண்ணாடி போல் விளங்கவேண்டிய நாடகத்திலோ கதையிலோ அவ்வாறு கண்ணீரைப் பிழிந்து விடுவதாகக் காட்டினால் எழுதினால், அங்குக் கற்பனை பொருந்துவதாக ஏற்றுக் கொள்ளப்படாது. ஏன் எனில் |