Untitled Document மனக் கண்ணின் நிறம் பழங்காலத்துப் புலவர் ஒருவர் ஆற்றோரமாகச் சென்றபோது ஒரு மடுவின் கரையில் நின்று இளைஞர்கள் விளையாடும் காட்சியைக் கண்டார். மடுவின் கரையில் இருந்த மருத மரத்தின் கிளை ஒன்று நீர்ப் பக்கமாகச் சாய்ந்துகிடந்தது. அந்தக் கிளையில் இளைஞர் ஏறி, 'துடும்' என்று நீரில் குதித்து, ஆழ்ந்து முழுகி மணல் கொண்டு வந்து கரையில் உள்ளவர்க்குக் காட்டி மகிழ்ந்தனர். அலை பிதிர்ந்து எழுமாறு அவர்கள் ஆழ்ந்த நீரில் குதிக்கும் காட்சியைக் கண்டு கரையில் நிற்பவர் வியப்பு உற்றனர். வஞ்சனை அறியாத அந்த இளைஞரின் ஆடலைப் புலவரும் கண்டார். மற்றவர்களைப்போல் அவர் வியப்பு உற்று நிற்கவில்லை. கற்பனைத் திறம் மிக்க அவருடைய நெஞ்சம், இளமைப் பருவத்தில் அவர் ஆடிய விளையாட்டுகளை நினைவூட்டியது. புலவர் அப்போது முதுமை உற்றுக் கோல் ஊன்றி இருமலும் உடையவராய் இருந்தார். தளர்ந்த அந்த முதுமையோடு அவர், மடுவில் பாய்ந்த இளைஞரைக் கண்டதும் தம் இளமைப் பருவத்தை நினைத்தார். தாமும் அவ்வாறு மறையும ்மாயமும் அறியாமல் நீரில் குதித்து மூழ்கி விளையாடிய நாட்களை நினைந்தார். இளமகளிரோடு சேர்ந்து பாவை வைத்து விளையாடி அவர்களோடு கை கோத்து ஆடி மகிழ்ந்த நாட்களையும் நினைத்தார். அந்த இளமையின் துடிதுடிப்பான ஆட்டங்களைக் கற்பனையால் நினைந்து பார்த்த பிறகு தம்முடைய தண்டு ஊன்றிய முதுமையையும் எண்ணினார். அந்த இளமை எங்கே போயிற்றோ என்று வருந்தினார். இனிநினைந்து இரக்கம் ஆகின்று திணிமணல் செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத் தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு உயர்சினை மருதத்து உறையுறத் தாழ்ந்து நீர்நணிப் படுகோடு ஏறிச் சீர்மிகக் கரையவர் மருளத் திரையகம் பிதிர நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து குளித்துமணல் கொண்ட கல்லா இளமை | |
|
|