இதனுள் ஒரு கல் இத்தனை பொருள்களையும் சிதறியும் உதிர்த்தும் துளைத்தும் உழக்கியும் கிழித்தும் செல்வதாகக் கூறல் வெறுங்கற்பனை (fancy) யாகத் தோன்றுகிறது. ஆயினும் ஆராய்ந்து நோக்கின், அது சிறப்புடைக் கற்பனையாகவே விளங்கக் காணலாம். கல் கவணிலிருந்து விசையுடன் - மிக்க விசையுடன் எறியப்பட்டது. முதலில் அது உதிர்த்தது வேங்கைப் பூக்களையே. ஆதலின், அதன் வேகம் தணியக் காரணம் இல்லை. அந்த வேகத்துடன் ஆசினியின் பழங்கள் மேல் பட்டவுடன் அவற்றை உதிர்த்து விட்டது. அவை அளிந்த மென்மையான பழங்களாதலின், கல்லின் வேகத்தைக் குறைக்கவில்லை. அடுத்தாற்போல் பட்டது தேன்கூட்டில் ஆகும். அதுவும் மென்மையானதே. ஆதலின் அங்கும் பெருந்தடை ஒன்றும் இல்லை. அடுத்த மாங்கொத்து ஒருசிறு தடையே எனலாம். அதற்கடுத்த வாழையிலை கல்லின் வேகத்தைத் தடுக்காமலே கிழிபட்டு நின்றது. இறுதியாகக் கல்லைத்தடுத்தது பலாப்பழம் ஒன்றுதான். இதற்குள் சிறிது வேகம் குன்றிவந்த கல் அந்தப் பலாப்பழத்துள் செல்லும் அளவுக்கே வேகம் பெற்றிருந்தது. அதைத் துளைத்து வெளிவர இயலாமல் உள்ளே தங்கி விட்டது என்கிறார். இவ்வாறு ஆராய்ந்து காணும்போது இது நல்ல கற்பனை யாகவே - உண்மையை விட்டு விலகாத கற்பனையாகவே விளங்கக் காணலாம். கல் எறிந்த திசையில் இத்தனை பொருளும் இருந்திருக்குமா என்பது ஐயுறுத்தக்கது. இத்தனை பொருளும் இன்னும் பலவும் இருந்திருக்கும். ஆனால் கலைஞர் கூறியுள்ள இந்த வரிசையில் அமைந்திருக்கும் என்று கூறல் இயலாது. அதனால் அவர் உள்ளம் விழைந்த கற்பனை எனவும், அறிவுக்கு இயைந்த கற்பனையே எனவும் கொள்ளல் தரும். வல்வில் ஓரியைப் பாடிய வன்பரணரின் பாட்டு இங்கு ஆராயத் தக்கது. அவனுடைய பெயர்ச் சிறப்புக்கு ஏற்ப, அவன் - வில்லில் அம்பு தொடுத்து எய்வதில் மிகச் சிறந்து விளங்கினான் எனக் கொள்ளல் வேண்டும். அவன் எய்த அம்பு முதலில் யானையை வீழ்த்தியது. பிறகு அது ஒரு புலியை கொன்றுவிட்டு அப்பால் சென்று ஒரு மானை உருட்டித் தள்ளியது. அதன் பின்னர் ஒரு காட்டுப் பன்றியை |