சொல்லுந போலவும் கேட்குந போலவும் சொல்லியாங்கு அமையும் என்மனார் புலவர்1 என்று தொல்காப்பியம் எடுத்துரைக்கும் இலக்கணம் பொருந்து வதாக உள்ளது. படைப்புக் கற்பனை இனிக் கற்பனையின் வகைகளைக் காண்போம்: படைப்புக் கற்பனை, இயைபுக்கற்பனை, கருத்து விளக்கக்கற்பனை என அது மூவகைப்படும் என்பர். புலவர் ஒருநாள் ஒரு மலைமீது சென்றபோது வழியில் ஒரு பாறையின் மேல் பெரிய முட்டை ஒன்று இருந்தது. அது மயிலின் முட்டை என்று உணர்ந்தார்.அழகான மயிலின் முட்டை இவ்வாறு புறக்கணிக்கப்பட்டுப் பாறையின்மேல் கிடக்கின்றதே, ஒரு கூட்டினுள் மெத்தென்ற பொருள்களின் மேல் வைத்துக்காக்கப்பட வேண்டுமே, இந்த முட்டைக்கு ஏதேனும் இடையூறு நேர்ந்தால் ஆடுங் கலையில் வல்ல ஓர் அழகான பறவையின் வாழ்வுக்கே இடையூறாகுமே என்றெல்லாம் அந்தப் புலவரின் கலை நெஞ்சம் உணர்ந்தது. சில நாள் கழித்து வேறொரு வழியே சென்றபோது வேறொரு பாறையின் மேல் வெளியில் விளையாடிக்கொண்டிருந்த கருங் குரங்கின் குட்டி ஒன்றைக் கண்டார். அது உருண்டையான ஒரு பொருளைஉருட்டி விளையாடிக் கொண்டு அங்கு இருந்தது. சில நாள் கழித்துத்தன் வீட்டில் உட்கார்ந்து எதையோ சிந்தித்துக் ்கொண்டிருந்த புலவர் முதல் நாள் கண்ட பாறையை நினைத்தார். மயிலின் முட்டை அவருடைய நினைவுக்கு வந்தது. உடனே குரங்குக் குட்டியையும் நினைத்தார். அந்த முட்டை குரங்குக் குட்டியின் கையில் அகப்பட்டு உருட்டப்படுமானால் என்ன ஆகும் என்று எண்ணி வருந்தினார். கான மஞ்ஞை அறைஈன் முட்டை வெயிலாடு முசுவின் குருளை உருட்டும் குன்ற நாடு2 1. தொல்காப்பியம், செய்யுளியல், 129 2. குறுந்தொகை, 38 |