| புதிய அழகைக் காணுகிறது. அவ்வாறு ஒப்புமை கண்டு கூறுவதையே உவமை என்று இலக்கண நூலார் கூறுவர். உவமையை அடுத்த வேறு சில அணிகளும் உள்ளன. உவமை அழகுள்ள ஒரு பொருளை மற்றொன்றன் அழகோடு ஒப்பிட்டுக் காணும் இந்த உவமையே கலைகள் பலவற்றிற்கு அடிப்படை என்பர். வேலியில் செழித்து வளர்ந்த நொச்சியின் இலையைக் கண்டார் புலவர். அந்த இலையில் வடிவம் அவருடைய உள்ளத்திற்கு வேறு ஒன்றை நினைவூட்டியது. நினைவிற்கு வந்த பொருள் மயிலின் அடி. மயில் அங்கே அப்போது இல்லை. ஆயினும் அவருடைய மனக் கண்ணின் முன் மயில் அடி வந்து நின்றது. நொச்சி இலையின் அமைப்பும் மயில் அடியின் வடிவமும் ஒத்திருத்தலைக் கண்ட அவருடைய மனம் உவமைப்படுத்தியது.* மயில்அடி இலைய மாக்குரல் நொச்சி.+ மயிலின் கால் விரல்களைப் பலரும் கண்டுள்ளனர். வேலியில் வளர்ந்திருக்கும் நொச்சி இலையையும் பலரும் கண்டுள்ளனர். ஆயினும் நொச்சி இலைகள் மயில் அடி போன்றவை என்று உவமை அமைக்கப் புலவரால்தான் முடிகின்றது. அதற்குக் காரணம் ஒரு வடிவத்தைப் புறக்கண்ணால் கண்ட உடனே மனக் கண்ணில் அது போன்ற மற்றொரு வடிவத்தைப் படைத்துக் காணும் கற்பனைத் திறனே ஆகும். உவமை உருவகம் முதலிய எல்லாவற்றிற்கும் இதுவே அடிப்படை எனலாம்.
கலைஞர் திறன்
கலைஞர் அல்லாதவர், உலகில் காணும் பொருள்களைப் பாகுபாடும் வேறுபாடும் செய்து காண்பதில் முனைந்துள்ளனர். * Indeed only a poet can make a just and exact comparison for the first time, because only a poet has the gift to see the likeness in two things which on the surface are quite different. - P.H.B. Lyon. The Discovery of Poetry, p. 167 + குறுந்தொகை, 138 |