| காட்டுவார். உணர்ச்சிகளுக்குச் சொல் வடிவம் தரும் கவிஞராக இருந்தால் மயிலின் ஆடலும் அழகும் புலனாகும் வகையில் சொற்களையும் அவற்றினூடே ஒலி நயத்தையும் படைத்துக் காட்டுவார். இவ்வாறு ஒரே பொருளிடத்திருந்து பெறுகின்ற அனுபவமே ஆயினும் அவருடைய திறனுக்கும் பயிற்சிக்கும் ஏற்றவாறு கலை வடிவம் தந்து படைக்கின்றார்கள். திறனும் பயிற்சியும் வேறுபடுவதால்தான் கலையனுபவத்திலும் வேறுபாடு ஏற்படுகிறது. அனுபவத்தைப் பிறர்க்கு உணர்த்துவதற்காகப் படைக்கும் படைப்பிலும்-அமைக்கும் வடிவங்களிலும்-வேறுபாடு காணப்படுகிறது. புலவர் ஒருவர் காட்டில் ஒரு முயலைக் கண்டார். அதன் அழகு அவருடைய நெஞ்சில் நன்கு பதிந்தது. அவர் ஓவியராக இருந்திருந்தால் அதன் உருவத்தைத் தீட்டியிருப்பார். சொல்லோவியப் புலவர் ஆதலின் சில சிறு சொற்களைக் கொண்டே அதன் உருவத்தைப் புலப்படுத்த முயன்றார். தூமயிர்க் குறுந்தாள் நெடுங்செவிக் குறுமுயல் என்றார்.அவருடைய சொல்லோவியத்தில் முயலின் முழு உருவமும் இல்லை. எல்லா உறுப்புக்களும் இல்லை. உள்ளத்தைக் கவர்ந்த சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டார், தூய்மையான மயிரும் சிறு கால்களும் நீண்ட செவியும் உடைய சிறிய முயல் என்றார். இந்த ஓர் அடியில் உள்ள நான்கு சிறு தொடர்களைக் கற்றவுடனே கற்பவர் உள்ளத்தில் முயலின் உருவம் வந்து அமைகிறது. விரிவு இல்லை கலைஞருடைய அனுபவம் மிக விரிவானதாகும். அவர் தம் அனுபவத்தில் பெற்ற பல கூறுகளில் சிறந்த சிலவற்றை மட்டும் கொண்டு கற்பனையில் முழுமை உடையதாக ஆக்கிப்படைத்துக் காட்டுவர். அவ்வாறு படைக்கும் வருணனையில் எல்லாவற்றையும் விடாமல் வருணிக்கும் போலிப் புலமையைக் காண்பது இல்லை. ஒன்றையும் விடாமல் எல்லாப் பகுதிகளையும் விளக்கிக் கூறும் வன்மை யந்திரம் போன்ற மனத்திற்கே ஏற்றதாகும். உணர்வு மிக்க மனம் அத்தகைய வருணனைகளை விரும்புவதும் இல்லை; நுகர்வ தும் இல்லை; உணர்ச்சி குன்றாமல் அமைய வேண்டிய பாட்டில் |