| எண்ணலும் தொகுத்தலும் இவ்வாறெல்லாம் அல்லாமல், இலக்கியத்தில் உள்ள சொற்களை எண்ணிக் கூறலும், சிறந்த சொற்றொடர்களைத் தொகுத்தலும் புதிய சொல்லாட்சிகளைத் தேர்ந்தெடுத்தலும், ஒத்த கருத்துகளைத் திரட்டித் தருதலும் முதலானவை இலக்கிய ஆராய்ச்சி எனக் கொள்ளத்தக்கன அல்ல. அவை இலக்கிய ஆராய்ச்சி செய்யும் பிறர்க்குத் துணை புரிவன என்பது உண்மை ஆயினும், இலக்கிய ஆராய்ச்சி என்று கொள்ளப்படுவன அல்ல. இலக்கியத்திற்கு உரை எழுதிக் கற்பவர்க்கு உதவி செய்தலும் அத்தகையதே ஆகும். இவ்வளவில் நிற்காமல், நூலாசிரியன் படைப்புக்கு விளக்கம் தரத் தொடங்கும் போதுதான், அது இலக்கிய ஆராய்ச்சியின் தொடக்கம் ஆகிறது. இரு தூண்கள் ரிச்சர்ட்ஸ் என்னும் அறிஞரின் கருத்துப்படி, இலக்கிய ஆராய்ச்சிக்குத் தூண்களாக உள்ளவை இரண்டு ஒன்று. இலக்கியத்தின் மதிப்புப் பற்றிய அறிவு; மற்றொன்று, உணர்த்தும் திறன் பற்றிய அறிவு1. ஆகவே, மதிப்பு பற்றியும் உணர்த்தும் திறன் பற்றியும் அறிவன அறிந்தவரே இலக்கிய ஆராய்ச்சிக்கு உரியவர் ஆவர். ஆய்வோரின்வேறுபாடு ஒரு நூலைப்பற்றி அறிஞர் கருத்துரை வழங்குவார் களானால், அந்த இரு கருத்துரைகளுக்கும் இடையே வேறுபாடு காணப்படும். அந்த வேறுபாட்டை ஆராய்ச்சிகளின் வேறுபாடு என்று கூறுதலைவிட, ஆய்வோரின் வேறுபாடு என்று கூறுதல் பொருந்தும். அனடோல் பிரான்ஸ் என்னும் அறிஞர் இதனை வேடிக்கையான முறையில் விளக்குகிறார்:ஒருவர் கம்பரைப்பற்றிச் சொற்பொழிவு செய்வதானால், அவர், "யான் இன்று கம்பரின் 1. The two pillars upon which a theory of Criticism must rest are an account of value and an account of communication. - I.A. Richards Principles of Literary Criticism, p.25 |