கலைகள் ஏன்? இயற்கையும் வாழ்க்கையும் அல்லவோ கலைகளில் வழங்கப்படுகின்றன? இயற்கையையும் வாழ்க்கையையுமே புலன்களால் நுகர்ந்து அவை தரும் இன்பத்தோடு அமைதியுறலாமே, கலைகள் ஏன் என்று கேட்கலாம். முதலாவதாக, இயற்கையிலும் வாழ்க்கையிலும் உள்ள அழகின்பம் தெளிவானதாக இல்லை. கதம்பமாகக் குழம்பிய நிலையில் வேண்டுவன வேண்டாதன பொருந்துவன பொருந்தாதன எல்லாம் கலந்து உள்ளன. ஆதலின் மனம் அவற்றை நன்கு நுகர முடியவில்லை. குழம்பிய நிலையை - கதம்பமாகக் கலந்த நிலையை - மாற்றி, வேண்டுவனவும் பொருந்துவனவும் மட்டும் கொண்டு அமைத்தால் மனம் நன்கு நுகர முடிகின்றது. கலை இதைச் செய்து தருகின்றது; ஆதலால் தேவையாகின்றது. இரண்டாவதாக, இயற்கையும் வாழ்க்கையும் தரும் இன்பம் நொடிக்கு நொடி மாறிவிடுகிறது; நாம் வேண்டும் போது கிடைப்பதும் இல்லை. கலை நாம் வேண்டும்போது கிடைக்கக்கூடிய வகையில் படைத்து நிலைக்கச் செய்கின்றது; ஆதலால் தேவைப்படுகின்றது. மூன்றாவதாக, வாழ்க்கையில் குழந்தைப் பருவத்தில் மனம் இயல்பான நிலையில் இருந்து புலன்கள் வாயிலாக அழகுவிருந்தை நுகர்கின்றது. ஆனால் வளர வளர, வாழ்க்கைச் சுமையும் அதை ஒட்டிய கவலைகளும் பெருகப் பெருக, மனம் தன் இயல்பை இழந்து செயற்கையான போக்கிற்கு அடிமைப்பட்டு யந்திரம் போல் இயங்கத் தொடங்குகிறது.*அந் நிலையில், குழந்தை போல் வானவில்லையோ முல்லை மலரையோ ஓடும் நீரையோ பறக்கும் காக்கையையோ பார்க்கும் ஆர்வம் இல்லாமற்போகிறது, ஆகையால் இயற்கையும் வாழ்க்கையும் புலன்களுக்கு உரிய விருந்துகளை ஏந்திக் காத்திருந்தபோதிலும், மனிதன் அவற்றைப் * Mere use and familiarityblind us to the beauty that is in common things and in a erage human nature. -S.J. Brown, The Realm of Poetry. Moreover, the daily task, the monotonous round of every day life absorbs our time and our energies... Little wonder that the perceiving powers grow blunt and culled, nay, atrophied for want of use. - Ibid p.98. |