உரைநடையாக எழுதப்படுவதிலும் உணர்ச்சி அமைவது உண்டு. அதைப் பாட்டு என்று பலர் கொள்வதில்லை. இக்காலத்தினர் சிலர் அதையும் உரைநடைப் பாட்டு (வசன கவிதை) எனக் கொள்வர். இவ்வாறு முதலில் செய்யுளையும் உரைநடையையும் பிரித்துணர்ந்து, பிறகு பாட்டு (Poetry) இன்னது எனத் தெளிதல் வேண்டும். பாட்டு, செய்யுள், உரைநடை மூன்றையும் தெளிவாக உணர்வதற்குப் பின்வரும் வேறுபாடுகளைக் கருதல் வேண்டும். பாட்டு என்பது கலை; உணர்ச்சியை முதலாகக் கொண்டது; ஆகையால் அது அறிவியலுக்கு (Science) மாறானது. பாட்டு அழகிய வடிவம் உடையது; ஒலிநயம் உடையது; அதற்குத் துணையுறுப்புகளான எதுகை, மோனை முதலியனவும் உடையது. ஆகையால் அது உரைநடைக்கு வேறுபட்டது. பாட்டு, செய்யுளுக்கு மாறானது அன்று. உணர்ச்சியும் கற்பனையும் பொருந்திய செய்யுள் (Verse) எல்லாம் பாட்டு (Poetry) எனத் தகும். உணர்ச்சியும் கற்பனையும் இல்லாமல் சோதிடம் மருத்துவம் நீதி முதலியவற்றை எடுத்துரைக்கும் செய்யுள் எல்லாம் பாட்டு அல்ல. செய்யுள் உரைநடைக்கு மாறானது. ஏன் எனில். செய்யுளுக்கு எதுகை மோனை யாப்பு ஆகியவை இன்றியமையாதவை. உரைநடைக்கு அவை தேவை அல்ல. உரைநடை, பாட்டுக்கு முற்றிலும் முரணானது அன்று. ஏன் எனில், உணர்ச்சியும் கற்பனை வளமும் உடைய உரைநடை ஒலிநயமும் கூடி அமைந்துவிட்டால் (யாப்பு இல்லாவிடினும்) பாட்டுப் போன்றதாகும். வசன கவிதை (Prose poetry) என்று மேனாட்டார் அதைப் போற்றுவர். செய்யுள், உரைநடை என்பன வடிவம் பற்றிய பாகுபாட்டை உணர்த்துவன. வரலாறு செய்யுள் வடிவிலும் அமையலாம்; பழங்காலத்தில் மருத்துவம், சோதிடம் முதலியன பெரும்பாலும் செய்யுள் வடிவில் அமைந்தன; இக்காலத்தில் அவை உரை நடையில் அமைகின்றன. பழங்காலத்தில் இலக்கிய நூல்கள் செய்யுளில் மட்டும் அமைந்தன; இக்காலத்தில் அவை செய்யுளிலும் அமைகின்றன. உரைநடையிலும் அமைகின்றன. செய்யுளாக |