ஏட்டைத் துடைப்பது கையாலே - மன வீட்டைத் துடைப்பது மெய்யாலே வேட்டை அடிப்பது வில்லாலே - அன்புக் கோட்டை பிடிப்பது சொல்லாலே* இங்கே, மனத்தில் அமைந்த ஓர் ஒலி நயத்தைப் பிடித்துக் காப்பதற்காகச் செய்த முயற்சியின் பயனாகச் சில சொற்களையும் ஒலிகளையும் திரும்பத் திரும்பக் கூறி மகிழும் நிலையைக் காணலாம். எல்லை இல்லாதோர் வானக் கடலிடை வெண்ணிலாவே - விழிக்கு இன்பம் அளிப்பதோர் தீவென்று இலகுவை வெண்ணிலாவே! சொல்லையும் கள்ளையும் நெஞ்சையும் சேர்த்திங்கு வெண்ணிலாவே - நின்றன் சோதி மயக்கும் வகையது தான் என் சொல் வெண்ணிலாவே! ** என்ற பாட்டில் இரண்டாம் நிலையைக் காணலாம். வெண்ணிலாவைப் பார்த்து உள்ளக் கிளர்ச்சி ஏற்பட்டபோது, என்றோ ஒருநாள் உள்ளக் கிளர்ச்சியின்போது உள்ளத்தில் அமைந்த ஒலிநயத்தைப் பயன்படுத்திப் பிறகு அதனை அமைத்துப் பாடி மகிழ்தல் காணலாம். மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே முதலான நாட்டுப் பாடல்களில் மூன்றாம் நிலையைக் காணலாம். இன்றும் சிற்றூர்களில் ஏற்றம் இறைத்தல், நாற்று நடுதல், களை பறித்தல், அறுவடை முதலிய தொழில்களின்போது மக்கள் இத்தகைய பாட்டுக்களைப் பாடி மகிழ்தலைக் காணலாம். மகளிர் சுண்ணம் இடிக்கும் போது பாடப்படும் பாட்டு (திருவாசகத்தில் உள்ள திருப்பொற் சுண்ணம் போன்றது), அவல் இடிக்கும்போது பாடப்படும் வள்ளைப் பாட்டு முதலியன இவ்வகையைச் சார்ந்தவை. * பாரதியார் பாடல்கள்,அம்மாக்கண்ணுபாட்டு ** பாரதியார் பாடல்கள் வெண்ணிலா, பாட்டு) |